ஓயாத சண்டை… சல்மான் வழியில் ட்விட்டரில் பேசிய சூர்யா
ட்விட்டரில் பிற நடிகர்களைப் பற்றி திட்டி குவிக்கும் ரசிகர்களுக்கு சல்மான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனைப் பின்பற்றி சூர்யா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ட்விட்டரில் சண்டை போடாதீர்கள் என்று கூறியுள்ள சூர்யா தனது ரசிகர்களுக்கு சல்மான் கானின் ட்விட்டரை ரீடிவிட் செய்துள்ளார்.
சூர்யாவின் 'மாசு' படம் வெளியானதில் இருந்தே அஜித், விஜய், சூர்யா ஆகியோரது ரசிகர்கள் தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்தார்கள். ரசிகர்களுக்கு இடையே மோதல் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இதை எப்படி நிறுத்துவது என்று யோசித்த சூர்யா சல்மான் கான் வழியை தேர்ந்தெடுத்துள்ளார்.
சண்டை ஏன்?
பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் ஆகியோரது ரசிகர்கள் யார் முதல் இடம் என்று சண்டையிட்டு வந்தார்கள். இதனால் எரிச்சலான சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் "உங்களுக்கு பிடித்த நாயகர்களை வைத்து சண்டை போடுவது நன்றாக இல்லை. இந்த பயணத்தை அழகாக ஆக்குங்கள்.
சல்மான் கான் எச்சரிக்கை
அசிங்கமான ட்விட்டர் சண்டையில் பங்கெடுக்க நான் இங்கு வரவில்லை. இதைத் தொடர்ந்தால் ட்விட்டரிலிருந்து வெளியேறிவிடுவேன் என்று எச்சரித்துள்ளார் சல்மான் கான்.

அவமானப்படுத்துவதா?
இங்கு வந்தது அன்பைப் பரப்ப, சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள, ரசிகர்களுடன் இனிமையாக நேரத்தை செலவிட. அவர்கள் என் துறையை சேர்ந்தவர்களை அவமானப்படுத்துவதை பார்க்க அல்ல. சண்டை போடுவதையோ, அது அசிங்கமாக, ஆபாசமாக மாறுவதையோ நான் விரும்பவில்லை. ட்விட்டர் கொச்சையான வார்த்தைகளை முடக்க வேண்டும்." என்று சல்மான்கான் கூறியுள்ளதை ரீடிவிட் செய்துள்ளார் சூர்யா.
சூர்யா வேண்டுகோள்
இந்நிலையில் சூர்யா "எனது ரசிகர்களும் நலம் விரும்பிகளும் மற்றவர்களின் ரசிகர்களோடு சண்டையிடுவது பிடிக்கவில்லை. உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தோடும் நேரத்தை செலவிட்டு அவர்களைப் பெருமைப்படுத்துங்கள்!" என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
நீங்க நிப்பாட்டுங்க
இந்த பஞ்சாயத்துக்கு இடையே ட்விட்டரில் கருத்து கூறியுள்ள சீனு ராமசாமி, நடிகர்கள் பஞ்ச் டயலாக் பேசுவதை நிறுத்தினால் ரசிகர்கள் சண்டை தானாக நிற்கும் என்று கூறியுள்ளார். யார் கேட்பா? பஞ்ச் டயலாக் தானே படத்துக்கு பலமே என்பது இயக்குநருக்கு தெரியாதா என்ன?


Click it and Unblock the Notifications











