ஜோதிகா பேசியது குற்றமா? நல்லோர் சிந்தனையை படிக்காதவர்களுக்கு அது தெரியாது..சூர்யா பரபரப்பு அறிக்கை
சென்னை: மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. அந்த கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகை ஜோதிகா எப்போதோ விருது விழா ஒன்றில் பேசிய பேச்சு, சமீபத்தில் சர்ச்சையானது.
கோயில்களுக்கும் பள்ளிகளுக்கும் செலவு செய்யும் தொகையை பள்ளிகளுக்கும் மருத்துவ மனைகளுக்கும் கொடுங்கள் என்று அவர் அந்த நிகழ்ச்சியில் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆதரவும் எதிர்ப்பும்
இதையடுத்து சிலர், அவர் தஞ்சை பெரிய கோவிலை அவமானப்படுத்தி விட்டதாக விளாசினர். எஸ்.வி.சேகர் போன்றோரும் அவருக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இதையடுத்து ஜோதிகாவுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை என்று கூறி இருந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யா ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குற்றமாகப் பார்க்கிறார்கள்
அதில் அவர் கூறியிருப்பதாவது: 'மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை' என்ற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும் சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது. கோவில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாகக் கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை 'சிலர்' குற்றமாகப் பார்க்கிறார்கள்.

மக்களுக்கு உதவினால்
இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியவர்களே சொல்லி இருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லதோர் சிந்தனைகளைப் படிக்காத, காது கொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர்.

மனிதமே முக்கியம்
கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும் எங்களுக்கு கிடைத்த பேராதரவு, நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது. அறிஞர்கள், ஆன்மிகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர விரும்புகிறோம்.

துணை நிற்கிறார்கள்
தவறான நோக்கத்தோடு தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்குத் துணை நிற்கிறார்கள். முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையை கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் நன்றி' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











