'யாருமே வரலியே'... பட விழாவில் கண்ணீர் விட்டு அழுத கதாநாயகன்!
பொதுவாக ஒரு சினிமா விழா என்றால் திரையுலக பிரபலங்கள் பலரும் வருவார்கள். வாழ்த்திப் பேசுவார்கள். ஆனால் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்ட யாரும் வராததால், கண்ணீர் விட்டு அழுதார் படத்தில் நடித்த பிரஜின்.
ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.எம்.பிரகாஷ் தயாரிக்கும் படம் பழைய வண்ணாரப்பேட்டை. மோகன்.ஜி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் பிரஜன், ரிச்சர்ட், நிஷாந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள்.
அஸ்மிதா கதாநாயகியாக நடிக்கிறார். கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ரோபோ சங்கரும் நடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய படத்தின் நாயகன் பிரஜன், "இந்தப் படம் வெற்றிப் படமாக ஆகவேண்டும் என்று நான் தினமும் சாமியை கும்பிடுகிறேன். இசை வெளியீட்டு விழா நடத்த சிறப்பு விருந்தினர்களாக வர இருந்த அனைவரிடமும் கேட்டு அவர்கள் சரி என்று சொன்ன பிறகுதான் அவர்கள் பெயர்கள் அழைப்பிதழில் போட்டு அவர்களுக்கு விழாவிற்கு வருகை தந்து வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் விழாவிற்கு யாரும் வரவில்லை.

நான் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் இந்த படம் என் சினிமா வாழ்கையில் முக்கியமான படம். படத்தின் பாடல்களும் படமும் சிறப்பாக இருக்கும். பாடல்கள் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. உங்கள் பாராட்டு எங்களுக்கு வேண்டும் என்றுதான் அழைக்கிறோம். ஆனால் யாருமே வராதது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.
எனது நண்பர்களாக இருக்கும் சில நடிகர்கள் மட்டும் வந்து வாழ்த்தினார்கள்.

தயாரிப்பாளர் சங்கம் இதுபோல் நடக்காமல் ஒரு வரைமுறை படுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொகிறோம்," என்று கண்ணீருடன் கூறினார்.


Click it and Unblock the Notifications











