நீண்ட இடைவெளிக்குப் பிறகு எமனில் நடித்தது ஏன்? - நடிகர் தியாகராஜன் பேட்டி
நடிகர் தியாகராஜன்... பாரதிராஜாவால் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர். நாயகனாக நடித்துக் கொண்டிருந்த போதே லட்சுமி சாந்தி மூவீஸ் சார்பில் படம் தயாரித்தும் இயக்கியும் வந்தார். இவர் இயக்கியவை பெரும்பாலும் வெற்றிப் படங்களே.
மகன் பிரசாந்த் நடிக்க வந்ததும், நடிப்பிலிருந்து முழுமையாக ஒதுங்கி, தயாரிப்பாளர் - இயக்குநராக மட்டும் இருந்து வந்தார்.

இப்போது மீண்டும் நடிகராக மறுபிரவேசம் செய்துள்ளார், எமன் படம் மூலம்.
விஜய் ஆண்டனி - மியா ஜார்ஜ் நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படம் நேற்று வெளியானது. தியாகராஜன்தான் இதில் பிரதான வில்லன். பழைய இளமையான தியாகராஜனைப் பார்ப்பது போலவே இருப்பதாக பலரும் பாராட்டியுள்ளனர்.
எமனில் நடித்தது குறித்து தியாகராஜன் கூறுகையில், "காலங்கள் மாறினாலும், சினிமா மாறவில்லை. இன்றும் கதைதான் வெற்றியைத் தீர்மானிக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால், படம் எடுப்பது சுலபமாகியுள்ளது.
சில வருட கால இடைவேளைக்கு பிறகு நடிக்க முடிவு செய்த நான், என்னுடைய கதாபாத்திரங்களை மிகக் கவனமாக தேர்வு செய்து வருகிறேன்.
ஒரு சில கதைகளை கேட்ட அடுத்த கணமே, நாம் அதில் நடித்தாக வேண்டும் என்று நமக்கு தோன்றும். அப்படி எனக்கு கேட்ட மாத்திரத்திலேயே அவ்வாறு என் மனதில் தோன்றிய திரைப்படம் தான் 'எமன்'. எதிர்பாராத திருப்புமுனைகளை உள்ளடக்கி, முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'எமன்' திரைப்படத்தில் நான் ஒரு முக்கியமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். நிறைய பாராட்டுகள் கிடைத்து வருகின்றன," என்றார்.
பிரசாந்தின் அடுத்த படம் குறித்துக் கூறுகையில், "பிரசாந்த் மிகத் திறமையான நடிகர். கதைக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொள்பவர். அவரது மறுபிரவேசம் பிரமாண்டமாக இருக்கும். ஸ்பெஷல் 26 படத்தின் தமிழ் ரீமேக்கிலும், நான் படத்தின் இந்தி ரீமேக்கிலும் பிரசாந்த் நடிக்கவிருக்கிறார்," என்றார்.


Click it and Unblock the Notifications











