கொரோனா குணமாகி விட்டது... மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் வடிவேலு
சென்னை : கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேலு, கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு விட்டதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
ரெட் கார்டு போடப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார் வடிவேலு. சில மாதங்களுக்கு முன் அவர் மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டது. இதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார்.

கொரோனா தொற்று உறுதி
டைரக்டர் சுராஜ் இயக்கி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஷுட்டிங்கிற்காக சமீபத்தில் வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் லண்டன் சென்றனர். ஒமைக்ரான் அதிகம் பரவி வரும் பிரிட்டனில் இருந்து திரும்பியதால் வடிவேலுவிற்கு விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி
இதனையடுத்து சென்னை - போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வடிவேலுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வடிவேலுவை தொடர்ந்து டைரக்டர் சுராஜ், தயாரிப்பாளர்களில் ஒருவரான தமிழ் குமரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

டிஸ்சார்ஜ் ஆனார் வடிவேலு
சமீபத்தில் வடிவேலுவின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், வடிவேலு நலமாக இருப்பதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் தெரிவித்தது. அதன்படி கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக மீண்டதால் வடிவேலு, நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

முதல்வருக்கு வடிவேலு நன்றி
டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்த வடிவேலு, மக்கள் ஆசீர்வாதத்தால் கொரோனாவில் இருந்து மீண்டு நலமாக உள்ளேன். மூன்று நாட்கள் தனிமையில் இருக்க டாக்டர் அறிவுறுத்தி உள்ளனர். மருத்துவமனையில் இருந்த போது முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். முதல்வர், அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோருக்கு நன்றி என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











