நாளைய முதல்வர் வாசகம்… கட் அவுட்க்கு பால் அபிஷேகம்… ரசிகர்களுக்கு கண்டிஷன் போட்ட விஜய்?
சென்னை: வாரிசு திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், பனையூரில் ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் விஜய்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ரசிகர்களுக்கு விஜய் சார்பில் தடபுடலான பிரியாணி விருந்து கொடுக்கப்பட்டது.
பிரியாணி விருந்துடன் சுடச் சுட சில முக்கியமான அறிவுரைகளையும் விஜய் அவரது ரசிகர்களுக்கு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு சிக்கலுக்கு முடிவு?
விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. தமிழில் வாரிசு, தெலுங்கில் வாரசுடு என்ற டைட்டிலில் ரிலீஸாகும் இந்தப் படத்திற்கு, ஆந்திரா, தெலங்கானாவில் தியேட்டர்கள் கிடைப்பதில் பிரச்சினை காணப்படுகிறது. பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்குப் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆனாலும், வாரிசு படம் சொன்னபடி வெளியாகும் என தற்போது கூறப்படுகிறது.

பனையூரில் பிரியாணி விருந்து
இதனிடையே, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை நேற்று விஜய் சந்தித்து பேசினார். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம், பிரியாணி விருந்துடன் மாலை வரை நடைபெற்றது. நாமக்கல், சேலம், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமே இதில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுடன் தனித்தனியாக விஜய் போட்டோ எடுத்துக் கொண்டார். வெள்ளை சட்டையில் செம்ம ஸ்டைலிஷாக விஜய் ரசிகர்களை சந்தித்த போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின.

ரசிகர்களுக்கு முக்கியமான அட்வைஸ்
ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்திய விஜய், இறுதியாக அவர்களுக்கு சில அட்வைஸ்களையும் கொடுத்துள்ளாராம். அதில் முக்கியமாக முதலில் எல்லோரும் உங்களோட குடும்பத்தைப் பாருங்க. நீங்கள் வாங்கும் சம்பளத்தில் உங்கள் குடும்பத்துக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு அதன்பிறகு முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி பண்ணுங்க, அங்களோட தேவைகள் என்னன்னு தெரிஞ்சு தேடிப் போய் உதவி செய்யுங்க எனக் கூறியுள்ளாராம்.

விலையில்லா மக்கள் உணவகம்
தொடர்ந்து பேசியுள்ள விஜய், ரசிகர்கள் சார்பில் விலையில்லா உணவகம் நடத்துவதற்கும், இலவசமாக பால், ரொட்டி வழங்குவதற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். விலையில்லா மக்கள் உணவகத்தை முடிந்த வரை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துங்கள் எனக் கூறியுள்ளார். அதேபோல், படம் ரிலீஸாகும் போது கட் அவுட்க்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டாம், அதற்கு பதிலாக அந்த பாலை பசியில் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுங்கள் என்று அன்புக் கட்டளையிட்டுள்ளாராம்.

நாளைய முதல்வரே வாசகம்?
முக்கியமாக போஸ்டர்களில் நாளைய முதல்வர், வருங்கால தமிழகமே போன்ற அரசியல் சம்பந்தமான வாசகங்கள் வேண்டாம் என கண்டிப்புடன் கூறியுள்ளாராம். சமீபத்தில் மதுரையில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற ரீதியில் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். அதனால், இனி அதுபோன்ற போஸ்டர்கள் வந்துவிடக் கூடாது என்பதில் விஜய் தெளிவாக இருக்கிறாராம். நேற்றைய சந்திப்பில் அரசியல் பயணம், வாரிசு ரிலீஸ் சிக்கல் குறித்து விஜய் பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், விஜய் இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் பேசாதது அவரது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











