கூட்டத்தில் ரசிகனின் காலணியை எடுத்துக்கொடுத்த விஜய்.. எங்கேயோ போயிட்டீங்க.. கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: கூட்டத்தில் ரசிகர் ஒருவரின் காலணியை நடிகர் விஜய் எடுத்துக் கொடுத்த வீடியோ பலரையும் நெகிழ வைத்துள்ளது.
பாட்டு அரசன் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருடைய உடல் சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று நல் அடக்கம் செய்யப்பட்டது.
72 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

வெறும் காலுடன்
அந்த வகையில் நடிகர் விஜயும் எஸ்பிபியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். தனது காலணியை கழட்டி விட்டுவிட்டு வெறும் காலுடன் எஸ்பிபியின் உடலுக்கு அருகில் சென்ற விஜய் அவரது கால்களை தொட்டு வணங்கினார். தொடர்ந்து மறைந்த பாடகர் எஸ்பிபியின் மகனான எஸ் பி சரணுக்கும் ஆறுதல் கூறினார் விஜய்.

ரசிகரின் காலணி
இந்த நிலையில் தாமரைபாக்கத்தில் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நடிகர் விஜய் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய ரசிகர் ஒருவரின் காலணியை நடிகர் விஜய் தனது கைகளால் எடுத்து கொடுத்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சூழ்ந்த ரசிகர்கள்
மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்த விஜய்யை அடையாளம் கண்ட அவரது ரசிகர்கள் அவரை திடீரென சூழ்ந்தனர். இதனை அடுத்து விஜய்யை காவல்துறையினர் பாதுகாப்பாக வெளியேற்ற முயன்றனர்.

காலணியை எடுத்த விஜய்
அப்போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் தடுமாறிக் கீழே விழுந்தனர். அப்போது கீழே விழுந்த ரசிகர் ஒருவரின் காலணியை விஜய் தாமாகவே முன்வந்து எடுத்துக் கொடுத்தார். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











