சஸ்பெண்டை கொண்டாட தேங்காய் உடைப்பு: விஷால், வாராகி தரப்புக்கு இடையே மோதல்
சென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை வரவேற்று வாராகி மற்றும் எதிர்ப்பு நடிகர்கள் விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்தனர். அப்போது விஷால் மற்றும் வாராகி தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக தொடர்ந்து பேசி வந்ததாக குற்றம் சாட்டி அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக நடிகர் வாராகி மற்றும் எதிர்ப்பு நடிகர்கள் நடிகர் சங்க வளாகத்தில் இருக்கும் வித்ய கணபதிக்கு 108 தேங்காய் உடைத்து காணிக்கை செலுத்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
தேங்காய் உடைப்பின்போது விஷால் தரப்புக்கும், வாராகி தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தியதில் நடிகர் சங்கம் கோடிக் கணக்கில் கொள்ளையடித்ததாக வாராகி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில் இது குறித்து வாராகி ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திடம் கூறியதாவது,
நடிகர் சங்க முறைகேடுகளை பத்திரிகையாளர்களிடம் நாங்கள் தெரிவித்தோம் என குற்றம்சாட்டி 26 பேரை விஷால் தரப்பு சஸ்பெண்ட் செய்தது. இதை நியாயப்படுத்தியும் பேசி வருகின்றனர்.
தற்போது விஷால் பேட்டி கொடுத்தார் என்பதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் விஷால் இதை ஏற்க மறுத்து வருகிறார். நாங்கள் பேட்டி கொடுத்ததால் நடவடிக்கை எடுத்தது சரி என்றால் விஷால் பேட்டி மீதான இந்த நடவடிக்கையும் சரி தானே?
விஷால் முதலில் தம்முடைய முதுகில் உள்ள அழுக்கை துடைத்துவிட்டு அடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











