கைவிட்ட தந்தை.. வயிற்றில் குழந்தையுடன் பட்ட வேதனை.. மனோரமாவின் கண்ணீர் கதை!
சென்னை: 1958 ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் அவர்கள் மாலையிட்ட மங்கை என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார். அந்த திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மனோரமாவை அணுகினார். ஆனால், மனோரமா, நான் நாடகங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் எப்படி நகைச்சுவை நடிகையாக நடிப்பது என கேட்டு இருக்கிறார். அதற்கு, கண்ணதாசன், கதாநாயகியாக நடித்தால், ஒன்று, இரண்டு படங்களில் மட்டும் தான் நடிக்க முடியும், ஆனால், நகைச்சுவை நடிகையாக நடித்தால் நிச்சயம் சிகரத்தை தொடுவீர்கள் என்று சொல்லி இருக்கிறார். அவர் சொன்ன வார்த்தை உண்மையாகி நகைச்சுவையில் சாதனை படைத்தார் மனோரமா. அவரின் கண்ணீர் கதையை இந்த செய்தியில் பார்க்கலாம்.
1937ஆம் ஆண்டு மன்னார் குடியில் பிறந்தவர்தான் நடிகை மனோரமா. அவரின் இயற்பெயர் கோபிசாந்தா. இவர் தஞ்சாவூர் மாவட்டம் ராஜமன்னார்குடியில் ஒரு வசதியான குடும்பத்தில் காசியப்பன் மற்றும் ராமாமிர்தம் அம்மாள் தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். மனோரமாவின் அப்பா காசியப்பன் இரண்டாவதாக ராமாமிர்தம் அவர்களின் சகோதரியை திருமணம் செய்து கொண்டார். இதனால், கணவருடன் ஏற்பட்ட மனகசப்பால் கணவரை விட்டு பிரிந்து, மனோரமாவை அழைத்து கொண்டு காரைக்குடிக்கு வந்து, வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றினார்.

கைவிட்ட தந்தை: வசதியான குடும்பத்தில் பிறந்த மனோரமா, ஒரு வேலை சாப்பாட்டிற்காக செட்டியார் வீடுகளில் வேலை செய்தார். ஓட ஓட வறுமை துரத்திக்கொண்டே வந்ததால், வறுமையின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகவே தனது 12வது வயதில், நாடக கம்பெனி ஒன்றில் சேர்ந்தார். அப்போது தான், கோபிசந்தா என்ற தனது பெயரை மனோரமா என மாற்றிக் கொண்டார். "பள்ளத்தூர் பாப்பா" என்ற பெயரில் பிரபலமான நடிகை மனோரம்மாவிற்கு அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஏமாற்றிய கணவன்: ஒரு பக்கம் சினிமா, ஒரு பக்கம் நாடகம் என நிற்கக்கூட நேரமில்லாமல் உழைத்துக் கொண்டிருந்த மனோரமாவின் வாழ்க்கையில் விதி காதல் ரூபத்தில் நுழைந்தது. மேனேஜரான எஸ்.எம். ராமநாதன் என்பவரை காதலித்தார். இந்த காதலுக்கு அவருடைய அம்மாள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அம்மாவை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறி அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட கொஞ்ச நாட்களிலேயே காதல் கசக்க தொடங்கி விட இருவருக்கும் இடையே அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
வயிற்றில் குழந்தையுடன்: மனோரமாவின் வயிற்றில் இருந்த முதல் கரு கலைந்துவிட, மனோரமா அந்த வேதனையில் இருந்துள்ளார். ஆனால், அவரது கணவரோ, வீட்டில் இருந்தால் பணம் வராது என, ஒரே மாதத்திலேயே நாடகத்தில் நடிக்கும்படி அவரை கட்டாயப்படுத்தி இருக்கிறார். கணவரின் வற்புறுத்தலால் வேறு வழியே இல்லாமல் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்துள்ளார் மனோரமா, அதன்பின், இரண்டாவது முறையும் மனோரமா கர்ப்பமாக வயிற்றில் குழந்தையுடனே பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். குழந்தை பிறந்த பின்பும், மனோரமாவை குழந்தையுடன் இருக்க விடாமல், நடிக்க சொல்லி கட்டாயப்படுத்தி, பணத்தின் மீதே குறியாக இருந்து இருக்கிறார் மனோரம்மாவின் கணவர்.

1500 திரைப்படங்கள்: ஒரு கட்டத்தில் மேல் பொருமையை இழந்த மனோரமா, இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என முடிவை எடுத்து, கணவரை விட்டு பிரிந்து, சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி நடிக்க தொடங்கினார். மனோரமாவின் சினிமா வாழ்க்கை அன்றில் இருந்து தான் ஏறு முகமாக மாறியது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் படங்களில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.
இந்த நொடி இறந்தாலும் மகிழ்ச்சி: மனோரமா அளித்த பேட்டி ஒன்றில், செட்டியார் வீட்டில் வேலை செய்து வளர்ந்த என்னை, செட்டிநாட்டு ராஜா 'ஆச்சி மனோரமா' என மேடையில் அழைத்தார். அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. இந்த வாழ்க்கையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவள், எனது அடுத்த பிறவியில் கூட, நான் மீண்டும் மனோரம்மாவாக பிறக்க விரும்புகிறேன் என்றார். மனோரமா இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னால், நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவருக்கு பிடித்தமான வசனத்தை பேசி மூச்சுவிடாமல் பேசி, பலரின் கைதட்டளை பெற்றார். அப்போது, இந்த நொடி இறந்தாலும் நான் மகிழ்ச்சியாக இறந்து விடுவேன் என கூறி இருந்தார். அப்படி சொன்னா மனோரமா சில நாட்களிலேயே மரணத்தை தழுவினார். வாழ்க்கையில் தான் சந்தித்த அத்தனை சவால்களையும், தன்னுடைய சாதனைகளாக மாற்றிய ஆச்சி மனோரமா, தமிழ் சினிமாவின் நகைச்சுவை தர்பாரில் என்றைக்குமே முடி சூடா அரிசியாகவே இருப்பார்.


Click it and Unblock the Notifications











