“பாரம்பரியமான உணவு தான் பெஸ்ட்… சுவைக்காக வாழ்க்கைய இழக்க வேண்டாம்”: நடிகை கெளதமியின் பஞ்ச்
திருப்பதி: தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளவர் கெளதமி.
கமலுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த கெளதமி தற்போது தனது மகளுடன் வசித்து வருகிறார்.
கெளதமி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

90ஸ் கிட்ஸ் கனவுக்கன்னி
1988ல் வெளியான 'குரு சிஷ்யன்' படம் மூலம் நடிகையாக அறிமுகமான கெளதமி, தமிழில் முன்னணி நடிகையாக கலக்கியவர். திரைத்துறையில் தொன்னூறுகளில் டாப் கியரில் சென்றது கெளதமியின் பயணம், ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார், கார்த்திக் என முன்னணி நடிகர்களின் ஃபேவரைட் நாயகியாக வலம் வந்த கெளதமிக்கு, அவரது 35வது வயதில் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து அவர் மிகவும் தன்னம்பிக்கையுடன் மீண்டு வந்துள்ளார்.

திருப்பதியில் விழிப்புணர்வு
கமலுடம் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த கெளதமி, தற்போது அவரது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்திய பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கெளதமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், சில வினாடிகள் மட்டுமே நாவில் நிற்கும் சுவைக்கு அடிமையாகி வாழ்க்கையை வீணாக்கிட வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியிருந்தார்.

சுவைக்கு அடிமையாக வேண்டாம்
அதனைத் தொடர்ந்து திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது "இயற்கை விவசாயத்தை தவிர்த்து விளைவிக்கப்படும் பொருட்கள், சுவை கூட்டப்பட்ட உணவு பொருட்கள் போன்றவற்றை சாப்பிடுவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் அத்தகைய உணவுகள் மூலம் கிடைக்கும் சுவைக்கு அடிமையாகி நாம் அவற்றை மீண்டும் மீண்டும் சாப்பிட்டு ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறோம்" எனக் கூறினார்.

பாரம்பரியமான உணவு தேவை
தொடர்ந்து பேசிய அவர், "எனவே பொதுமக்கள் அப்படியான உணவுகளை தவிர்த்து இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை சாப்பிட வேண்டும். நமது பாரம்பரியமான உணவு முறைகளை பின்பற்றி இன்னும் பிறக்காத குழந்தைகளின் வாழ்க்கையையும் நாம் மேம்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும். இது போன்ற பிரச்சாரத்தை கேட்பவர்களில் ஆயிரம் பேரில் ஒரே ஒருவர் பின்பற்றினால் கூட படிப்படியாக உணவு முறையில் மாற்றம் ஏற்படும்? என்று கூறினார். நடிகை கெளதமி Life again foundation என்ற நிறுவனத்தை உருவாக்கி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











