‘மார்பிங் படங்கள் வெளியானதால் தற்கொலைக்கு முயற்சித்தேன்’.. ஷாக் தந்த பிரபல நடிகை!
மார்பிங் படங்கள் வெளியானதால் தற்கொலைக்கு முயற்சித்ததாக நடிகை ஜெயப்பிரதா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
சென்னை: தனது படங்கள் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடப்பட்டபோது, தான் தற்கொலைக்கு முயற்சித்ததாக வேதனையுடன் தெரிவித்துள்ளார் நடிகை ஜெயப்பிரதா.
80களில் தமிழின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக இருந்தவர் ஜெயப்பிரதா. இவர் தமிழில் மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, தசாவதாரம் உள்ளிட்ட வெற்றிப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிப் படங்களில் நடித்த இவர், எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர், தனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

வைரலான மார்பிங் படங்கள்:
கடந்த 2009ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் அமர்சிங் டயாலிஸ் செய்யவேண்டிய நிலைக்கு ஆளானார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் எனது மார்பிங் செய்யப்பட்ட படங்கள் சமூக வலை தளங்களில் பரவியது.

தற்கொலை முடிவு;
இதுகுறித்து தெரிந்ததும் நான் கதறி அழுதேன். இனிமேலும் வாழக்கூடாது என தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவுக்கு தள்ளப்பட்டேன். யாரும் எனக்கு உதவி செய்ய முன்வராததால் தனிமையான சூழலில் அப்படி ஒரு முடிவு எடுத்தேன்.

ராக்கி கட்டினேன்:
அந்த நேரத்தில் அமர்சிங் சிகிச்சையில் இருந்து வெளியே வந்து, எனக்கு ஆதரவாக நின்றார். இந்த சமயத்தில் நீங்கள் அவரை பற்றி என்ன நினைப்பீர்கள்? கடவுளாகவா அல்லது வேறு யாராவதாகவா? அவருக்கு நான் ராக்கி கயிறு கட்டி, அவர் என் சகோதரர் என நிரூபித்தேன்.

தவறான பேச்சு:
ஆனாலும் மக்கள் எங்களை தவறாக பேசுவதை நிறுத்தி விட்டார்களா? தொடர்ந்து பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். மக்கள் பேசுவது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை.

திராவகம் வீசுவதாக மிரட்டல்:
அரசியலில் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய போர் இந்த ஆணாதிக்க நடைமுறைதான். நான் எம்.பி.யாக பதவியேற்ற பின்னரும் போராட்டம் ஓயவில்லை. சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அசாம் கான் எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தார். அவர் என் மீது திராவகம் வீசி விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

துணிச்சல் தேவை:
அடுத்த நாள் நான் உயிருடன் இருப்பேனா என உத்தரவாதமும் இல்லை. நான் வீட்டை விட்டு கிளம்பும்போது எனது தாயிடம், நிச்சயமாக வீடு திரும்புவேனா என்று தெரியாது என கூறிவிட்டு தான் செல்வேன். ‘மணிகர்ணிகா' படத்தில் வருவதுபோல தேவைப்படும் நேரத்தில் பெண்கள் துர்க்கை அவதாரத்தை எடுக்கவேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











