நடிகை ஜியா கான் தற்கொலையில் புதிய திருப்பம்: தடயவியல் நிபுணரின் பகீர் ரிப்போர்ட்
மும்பை: பாலிவுட் நடிகை ஜியா கானின் மரணம் தற்கொலை அல்ல அது திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என்று இங்கிலாந்தை சேர்ந்த தடயவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்த ஜியா கான் கடந்த 2013ம் ஆண்டு மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜியாவின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று அவரது தாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் இதை சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுத்தார்.

சூரஜ் பஞ்சோலி
ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட மறு மாதமே அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

சிபிஐ
ஜியா கான் வழக்கை விசாரித்த சிபிஐ இது ராபியா கூறுவது போன்று கொலை அல்ல தற்கொலை தான் என்று கடந்த மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ராபியா
சிபிஐ அறிக்கை தாக்கல் செய்த பிறகு ராபியா இங்கிலாந்தை சேர்ந்த பெய்ன் ஜேம்ஸ் என்ற தடயவியல் நிபுணரை அணுகி விசாரிக்குமாறு கூறினார். அவர் ஜியாவின் பிரேத பரிசோதனை அறிக்கை, ஜியாவின் சடலத்தின் புகைப்படங்கள், சிசிடிவி வீடியோக்கள், ஜியாவின் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்தார்.

கொலை
தீவிர ஆய்வுக்கு பிறகு ஜியாவின் மரணம் தற்கொலை அல்ல என்று பெய்ன் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். ஜியா தூக்கில் தொங்கியது திட்டமிடப்பட்ட செயல் என்று கூறியுள்ளார். ஜியாவின் உடலில் இருந்த காயங்கள் அவர் தாக்கப்பட்டதால் ஏற்பட்டதாகவும் பெயின் தெரிவித்துள்ளார். ஜியாவை சூரஜ் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக ராபியா கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











