21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கல்பனாவின் உடல் தகனம் செய்யப்படும்- அமைச்சர்
திருவனந்தபுரம்: மாரடைப்பால் இறந்த நடிகை கல்பனாவின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று மாலை 5 மணியளவில் தகனம் நடைபெறுகிறது.
பிரபல நடிகை கல்பனா படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்த போது மாரடைப்பு காரணமாக தங்கியிருந்த ஹோட்டலிலேயே இறந்தார்.
இது ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கல்பனா
1985ம் ஆண்டு பாக்யராஜின் சின்னவீடு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கல்பனா. சதி லீலாவதி, டும்டும்டும், பம்மல் கே சம்பந்தம், ஆளுக்கொரு ஆசை மற்றும் சமீபத்தில் வெளியான காக்கிச்சட்டை படங்கள் வரை பல கலகலப்பான வேடங்களை ஏற்று கல்பனா நடித்திருந்தார்.

மாரடைப்பு
இந்நிலையில் நடிகை கல்பனா ஹைதராபாத்தில் நடிகர் நாகார்ஜூனாவுடன் தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக சென்றிருந்த போது ஓட்டல் அறையில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று மரணம் அடைந்தார். அவரது திடீர் மரணம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கேரளாவிற்கு
நடிகை கல்பனா உடல் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10.30 மணிக்கு கேரள மாநிலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது உடல் சொந்த ஊரான கொச்சி அருகே உள்ள திருப்புணித்துறை என்ற இடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது. அங்குள்ள லாயம் கூட்டம்பலம் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.

தென்னிந்தியத் திரையுலகம்
நடிகை கல்பனாவின் உடலுக்கு மலையாள, தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகை சேர்ந்த ஏராளமான நடிக, நடிகையர் மற்றும் பொது மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அவரது வீட்டிற்கு
பிற்பகலில் நடிகை கல்பனா உடல் புதிய காவில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தற்போது அவரது உடலுக்கு அஞ்சலிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு அங்குள்ள மயானத்தில் நடிகை கல்பனாவின் உடல் தகனம் நடைபெறுகிறது.

21 குண்டுகள் முழங்க
நடிகை கல்பனா மரணம் பற்றி கேரள மந்திரி திருவஞ்சியூர் ராதாகிருஷ்ணன் கூறும் போது "ஒரு சிறந்த நடிகையை திரையுலகம் இழந்து விட்டது. அவரது குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகை கல்பனாவை கவுரவிக்கும் வகையில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் நடைபெறும்" என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











