“கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘இது’ தான் இப்போ முக்கியம்”.. கஸ்தூரி சொல்றதும் கரெக்டு தான்!
கஜா நிவாரண உதவியாக வாட்டர் பில்டர்களைத் தர இருக்கிறார் நடிகை கஸ்தூரி.
Recommended Video

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில் ஆயிரம் வாட்டர் பில்டர்களை நிவாரணப் பொருட்களாக எடுத்துச் செல்ல இருக்கிறார் நடிகை கஸ்தூரி.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. புயலின் கோரத்தாண்டவத்தால் பல இடங்களில் இன்னும் மின்சாரம் திரும்பவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. பல இடங்களில் கொசுக்கடியும், மாசடைந்த நீரும் நோய்ப் பரவுவதற்கான முக்கியக் காரணிகளாக உள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் தொடர்ந்து உதவிகள் கிடைத்து வருகின்றன. அந்தவகையில் திரையுலகைச் சேர்ந்தவர்களும் தங்களால் இயன்ற அளவிற்கு நிதி மற்றும் நிவாரணப் பொருட்கள் கொடுத்து உதவி வருகின்றனர். சிலர் களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் வாட்டர் பில்டருடன் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி. இவற்றின் மதிப்பு ரூ. 12 லட்சம் எனக் கூறப்படுகிறது.
குடிநீர் தேவை:
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை அள்ளிக்கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துகிறேன். என்னால் முடிந்த அளவில் நிவாரண பொருட்களை எடுத்துக் கொண்டு நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல உள்ளேன். டெல்டா மாவட்டங்களின் தற்போதைய அத்தியாவசிய தேவை குடிநீர்.

நீர் சுத்திகரிப்பு கருவிகள்:
உணவு பொருட்கள், மருத்துவ உதவி போன்றவை பலதரப்புகளிலிருந்து வந்துகொண்டிருக்கும் வேளையில், குடிநீர் பற்றாக்குறை பூதாகரமாக தலையெடுத்துள்ளது. நாட்கள் செல்ல செல்லச், சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மிக பெரிய தேவையாக இருக்கும். இதற்கு அத்தியாவசியமான 1000 நீர் சுத்திகரிப்பு கருவிகளை வழங்க இருக்கிறோம்.

1000 கருவிகள்:
1000 குடும்பத்திற்கு தேவையான அதிநவீன குடிநீர் சுத்திகரிப்பான்கள், போர்வைகள், கொசுமருந்து, காய்ச்சல் நிவாரணி மாத்திரைகள், சானிடரி நாப்கின்கள் அடங்கிய லாரியை அனுப்புகிறோம். இந்த குடிநீர் சுத்திகரிப்பான்கள் பேரிடர் காலத்தில் பயன்படுத்த மிகவும் உகந்தவை. எங்கும் எடுத்து செல்லலாம், சுலபமாக பயன்படுத்தலாம், எத்தனை மாசுபட்ட தண்ணீரையும் தெளிந்த பாதுகாப்பான சுத்தமான குடிநீராக மாற்றிவிடும். கொதிக்கவைக்க அவசியமில்லை.

நன்றி:
பிளாஸ்டிக் பாட்டில்களையும், கேன்களையும் நாடவேண்டியதில்லை, இரண்டு வருடங்களுக்கு குறையாமல் செலவில்லாமல் குடிநீரை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இது வெளிநாட்டில் மட்டுமே இப்போதைக்கு கிடைக்கிறது, இங்கு நம் பயன்பாட்டிற்காக ஆயிரம் சுத்திகரிப்பான்களை உடனடியாக தயாரித்து அனுப்பியிருக்கும் சென்னை ராமா குடிநீர் சுத்திகரிப்பான் நிறுவனத்திற்கு நன்றி. முதல் கட்டமாக 1000 பில்டர்கள் வழங்குகிறோம்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











