நடிகை காவ்யா மாதவன்- திலீப் இன்று திடீர் திருமணம்!
கொச்சி: பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவனை திடீரென இன்று திருமணம் செய்கிறார் நடிகர் திலீப். இத்தனை நாட்களாக கிசுகிசுவாக வலம் வந்த காதலை இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர் இருவரும்.
நடிகர் திலீப் மலையாளத்தில் முன்னணி நடிகர். அவருக்கும் நடிகை மஞ்சு வாரியாருக்கும் 1998-ல் திருமணம் நடந்தது. இருவருக்கும் மீனாட்சி என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தக் கருத்து வேறுபாடு எழக் காரணமே திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும் உள்ள ரகசியத் தொடர்புதான் என்று கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். 2014-ல் விவாகரத்தை அறிவித்தனர்.
விவாகரத்து நடந்து கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது காவ்யா மாதவனுடன் தனக்கு உள்ள தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளார் திலீப். இருவரும் இன்று திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். இந்தத் திருமணம் ஆடம்பரமில்லாமல் தனிப்பட்ட நிகழ்வாக நடக்கவிருக்கிறது. கொச்சியில் காலை 10 மணிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்ச்சியில் வெளியாட்கள் யாருக்கும் அனுமதி இல்லை.
காவ்யாவுடனான தனது இந்த திருமணத்துக்கு மகள் மீனாட்சியின் வாழ்த்து நிச்சயம் உண்டு என்று தெரிவித்துள்ளார் திலீப்.
காவ்யா மாதவனும் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர்தான். அவருக்கும் துபாயைச் சேர்ந்த நிஷால் என்பவருக்கும் 2009-ல் திருமணம் நடந்தது. ஒரு ஆண்டுக்குள், 2010-ல் இந்தத் திருமணம் முடிவுக்கு வந்தது. சட்டப்படி விவாகரத்தும் பெற்றுவிட்டார் காவ்யா மாதவன்.


Click it and Unblock the Notifications











