“விருதுன்னு சொல்லி வரச் சொன்னாங்க, ஆனா இப்படி ஆயிடுச்சு”: கடுப்பான லட்சுமி ராமகிருஷ்ணன்
சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்ன திரை விருதுகள் விழா நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
2009 முதல் 2014 வரையிலான தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கும் திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அரசின் இந்த விருதுகள் வழங்கும் விழாவில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மாநில திரைப்பட விருது விழா
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்ன திரை விருதுகள் வழங்கு விழா நேற்று, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. மாலை 5 மணியளாவில் தொடங்கிய இந்த விழாவில், தமிழ்நாடு அமைச்சர்கள், திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள், சின்ன திரை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 2009 முதல் 2014ம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள் ஒன்றன்பின் ஒன்றாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் பங்கேற்றார்.

காத்திருந்த லட்சுமி ராமகிருஷ்ணன்
மாலை 4 மணி முதலே பரபரப்பாக காட்சியளித்த கலைவாணர் அரங்கத்திற்கு, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் 5 மணியளவில் சென்றதாகத் தெரிகிறது. 2011ம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர நடிகையாக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்த விருது 'உச்சிதனை முகர்ந்தால்' என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த லட்சுமி ராமகிருஷ்ணன், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்ததாக தெரிகிறது.

அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்
2011ம் ஆண்டு விருது பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு வரிசையாக விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால், அதேயாண்டில் துணை நடிகையாக தேர்வான லட்சுமி ராமகிஷ்ணனின் பெயர் மேடையில் அறிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விருதும் கொடுக்கப்படாமல் காக்க வைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், விழா நடைபெற்ற மேடைக்கு செல்லும் வழியில் நின்றுகொண்டு, அங்கிருந்த அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்.

டிவிட்டரில் விளக்கமும் மகிழ்ச்சியும்
அரசு அதிகாரிகளிடம் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வாக்குவாதம் செய்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. "விருது வழங்குவதாக சொல்லி என்னை வரவழைத்துவிட்டு, அசிங்கப்படுத்துவது ஏன்?" என கோபம் காட்டினார் இதனையடுத்து அவரை சமாதானம் செய்த அதிகாரிகள், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு விருது வழங்கி அனுப்பிவைத்தனர். அதன்பின்னர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள லட்சுமி ராமகிருஷணன், இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்ததோடு, இப்போது மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











