எங்களுடைய தவறு என்ன?.. இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து லாஸ்லியா உருக்கமான பதிவு !
சென்னை : நடிகை லாஸ்லியா இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து உருக்கமான பதிவை போட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றினார்.
ஒருசில விளம்பரங்களில் நடித்த லாஸ்லியாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ்
2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியாவின் தமிழிக்கும் அழகுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் மனதை பறிகொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இன்னொரு போட்டியாளரான கவினுடன் லாஸ்லியாவுக்கு காதல் ஏற்பட்டது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் அவர்கள் காதலர்களாக சுற்றி வருவதாக அவ்வப்போது செய்திகள் பரவின.

கூகுள் குட்டப்பா
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்த லாஸ்லியா, தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பிக் பாஸ் தர்ஷன் நாயகனாக நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை கே எஸ் ரவிகுமாரின் உதவி இயக்குனர்களாக இருந்து சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர்.

உருக்கமான பதிவு
இந்நிலையில், நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை போட்டுள்ளார். அதில், இலங்கையில் மிக மோசமான போரை எதிர்கொண்டோம், குடும்ப உறவுகள், உடமைகள் உட்பட அனைத்தையும் இழந்தோம். கோர சுனாமியின் பிடியில் சிக்கினோம், தேவாலய குண்டுவெடிப்பை எதிர்கொண்டோம். கொரோனா தாக்கியது தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறோம்.

எங்களுடைய தவறு என்ன ?
இவை எங்களுடைய தவறு அல்ல, நாங்கள் இலங்கையர் என்பதால் எல்லாவற்றையும் எதிர்கொள்கிறோம். ஒவ்வொரு சூழ்நிலையிலும், இவை அனைத்தையும் கையாளும் அளவுக்கு நாங்கள் பலமாக இருந்தோம். இப்போது, இந்த பரிதாபமான சூழ்நிலையை சமாளிக்க ஒன்றாக இருப்போம், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











