’ஆச்சி’ மனோரமாவின் மகன் பூபதி காலமானார்.. மதுவுக்கு அடிமை.. சினிமாவில் தோல்வி.. அதே அக்டோபர்
சென்னை: ஆச்சி என தமிழ் சினிமா ரசிகர்கள் அன்போடு அழைத்து வந்த நடிகை மனோரமா கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி உயிரிழந்தார். அவரது ஒரே மகனான பூபதி சென்னை தியாகராய நகரில் வாழ்ந்து வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் காலமானார். அம்மா இறந்த அதே அக்டோபர் மாதமே மகனும் இறந்துவிட்டார்.
தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கும் மேல் நடித்து சாதனை படைத்த ஒரே நடிகை என்கிற பெருமையை பெற்றவர் மனோரமா. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏகப்பட்ட படங்களில் நடித்தவர் மனோரமா.

இன்றளவும் நகைச்சுவை உலகில் மனோரமா இடத்தை பிடிக்க ஒருவரால் கூட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகனை எப்படியாவது சினிமாவில் பெரிய நடிகராக மாற்ற வேண்டும் என முயற்சித்தாலும் சினிமாவில் பூபதியால் சாதிக்க முடியவில்லை.
மனோரமாவின் மகன் பூபதி காலமானார்: சிவாஜி கணேசனே வியந்து பாராட்டிய நடிகை என்றால் அது மனோரமா தான். தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஜில் ஜில் ரமாமணியாக நடித்து மனோரமா ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சிரிப்பலையில் ஆழ்த்தினார். சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவே மனோரமாவின் நடிப்பை பார்த்து மிரண்டு போய்விட்டார். அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்துக்கு அம்மாவாக மனோரமா நடித்த நடிப்பை யாராலும் மறக்க முடியாது. மனோரமா ராமநாதன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறக்க பூபதி என பெயர் வைத்து வளர்த்தார். ஒரு சில படங்களில் நடித்தாலும் பூபதிக்கு பெரிதாக சினிமாவில் வெற்றி கிடைக்காத நிலையில், சினிமாவில் இருந்து விலகி வாழ்ந்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்று உயிரிழந்தார்.
5 படங்கள்: தூரத்து சொந்தம் படத்தில் மனோரமாவுடன் இணைந்து நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர், சரணம் ஐயப்பா, காஷ்மீர் காதலி, குடும்பம் ஒரு கதம்பம் மற்றும் மணல் கயிறு என சுமார் 5 படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். அவரை எப்படியாவது பெரிய நடிகராக்கி விட வேண்டும் என மனோரமா போட்ட முயற்சி எல்லாம் வீணானது.
மதுவுக்கு அடிமை: மதுவுக்கு அடிமையான நிலையில், தான் மனோரமாவின் மகன் பூபதியால் சினிமாவில் பெரிய நடிகராக வரமுடியவில்லை என்றும் கூறுகின்றனர். கொரானா காலக்கட்டத்தில் மது கிடைக்காத விரக்தியால் தூக்க மாத்திரிகைகளை உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை அவரது குடும்பத்தினர் போராடி காப்பாற்றினர்.
குழந்தைகள் எல்லாம் டாக்டர்கள்: சினிமாவில் தோல்வியை சந்தித்தாலும் குடும்ப வாழ்க்கையில் அவருக்கு அமைந்த மனைவி மற்றும் குழந்தைகள் அருமையானவர்கள். தனலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்ட பூபதிக்கு ராஜராஜன், அபிராமி மற்றும் மீனாட்சி என 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது மூவரும் மருத்துவர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதிச்சடங்கு: நடிகை மனோரமாவின் மகன் பூபதி இன்று காலை 10.40 மணிக்கு உயிரிழந்தார். அவரது வயது 70 என தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை மாலை 3 மணியளவில் கண்ணம்மாபேட்டையில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications











