கனவில்தான் கைது செய்யமுடியும்.. சவால் விட்டு கேரளாவில் பதுங்கிய மீரா மிதுன்.. தட்டி தூக்கிய போலீஸ்!
சென்னை: கேரளாவில் பதுங்கியிருந்த நடிகை மீரா மிதுனை தமிழக போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Recommended Video
பட்டியலின மக்கள் குறித்து ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் அவதூறாகவும் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார் மீரா மிதுன். அந்த வீடியோவில் பட்டியலின மக்கள் அனைவரும் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என கூறியிருந்தார்.
மேலும் சினிமாத் துறையில் உள்ள பட்டியலின மக்களை வெளியேற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார் மீரா மிதுன். ஆண் நண்பருடன் சேர்ந்து அவர் வெளியிட்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

கமிஷனர் அலுலகத்தில் புகார்
மீரா மிதுனின் அந்த வீடியோவுக்கு தமிழகம் முழுவதில் இருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. மேலும் தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் மீரா மிதுனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார்.

நேரில் ஆஜராக மீரா மிதுனுக்கு சம்மன்
அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த புகாரில் நேரில் ஆஜராக நடிகை மீரா மிதுனுக்கு சென்னை சைபர் க்ரைம் போலீசார் சம்மன் அனுப்பினர்.

போலீசுக்கு சவால் விட்ட மீரா மிதுன்
ஆனால் நேரில் ஆஜராகாத மீரா மிதுன், காவல் துறைக்கு சவால் விடும் வகையில் மீண்டும் பேசியிருந்தார். அதாவது. " தான் ஒரு தமிழ் சாதி பொண்ணு என்றும் ஒரு தமிழ் பெண் இந்த தமிழ்நாட்டில் வளர்ச்சியடைவதை பலரால் சகித்து கொள்ள முடியவில்லை. ஆனால், வேறு மாநில பெண்கள் இங்கு வளர முடிகிறது காந்தி, நேரு ஜெயிலுக்கு போகும் போது நான் போனால் என்ன? என்னை கைது செய்வது என்பது உங்கள் கனவில் தான் நடக்கும் என கூறியிருந்தார்.

எனக்கு நேரமில்லை - நான் பிஸி
மேலும் பட்டியலின மக்களை ஒட்டுமொத்தமாக தவறானவர்கள் என்று சொல்லவில்லை ; எனக்கு தொந்தரவு கொடுத்த அந்த சமூகத்தை சேர்ந்தவர்களைதான் தவறானவர்கள் என்று சொன்னேன். மேலும், தமிழ்நாட்டில் என்னைப் போன்ற 'புத்திசாலி' பெண்களுக்கு பாதுகாப்பில்லை. நீதிமன்ற வழக்குகளை சந்திப்பதற்கு எல்லாம் எனக்கு நேரமில்லை. எனக்கு நிறைய வேலை இருக்கிறது என ஸ்டைலாக பேசியிருந்தார்.

கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன்
இந்நிலையில் நடிகை மீரா மிதுன் கேரளாவில் சொகுசு விடுதி ஒன்றில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்று காலை மீரா மிதுன் தங்கியிருந்த அறைக்குள் அதிரடியாக நுழைந்தனர் போலீசார். அப்போது போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மீரா மிதுன்.
மேலும் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டினார் மீரா மிதுன்.

கைது செய்த போலீஸ்
இருப்பினும் அவரை கைது செய்த போலீசார், சென்னை அழைத்து வந்த விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதனிடையே மீரா மிதுன் இந்துக்கள் வணங்கும் சாய் பாபாவை அவ மதிக்கும் வகையில் சாய் பாபாவின் போட்டோ முன்பு கஞ்சாவை இழுத்து புகை விட்டுள்ள வீடியோவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











