நடக்க கூட முடியாது... சமந்தாவோட கஷ்டம் எனக்கு நல்லா தெரியும்: மனம் திறந்த பிரபல நடிகை
சென்னை: சமந்தா மயோசைட்டிஸ் (Mayositis) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் போட்டோவையும் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.
இந்நிலையில், சமந்தாவின் உடல்நிலை குறித்து பிரபல நடிகை பியா பாஜ்பாய் மனம் திறந்து பேசியுள்ளார்.

மயோசிடிஸ் பாதிப்பில் சமந்தா
கோலிவுட், டோலிவுட் என ரவுண்ட் அடித்து வந்த சமந்தா, தற்போது பான் இந்தியா நடிகையாக கலக்கி வருகிறார். சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்திருந்தது. முன்னதாக சமந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஒருகட்டத்தில் சமந்தாவே அதுகுறித்து மனம் திறந்தார். அதில், தனக்கு மயோசிடிஸ் நோய் பாதிப்பு இருப்பதாகவும், அதனால் தான் மிகவும் ரொம்பவே கஷ்டப்பட்டதாகவும் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

மனம் திறந்த பிரபல நடிகை
அப்போது உடலில் குளுகோஸ் ஏற்றியபடி சமந்தா சிகிச்சை எடுத்துகொள்ளும் போட்டோ வைரலாகி இருந்தது. இந்நிலையில், மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா குறித்து, கோ, கோவா, ஏகன் போன்ற படங்களில் நடித்துள்ள பியா பாஜ்பாய் மனம் திறந்துள்ளார். அதில், "சமந்தாவின் உடல்நிலை பற்றி எனக்கும் நன்றாக தெரியும். நானும் இதுபோன்ற ஒரு கடினமான் சூழலை எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளேன். 2015ல் நடந்த ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது தான் எனக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டது" எனக் கூறியுள்ளார்.

நடக்க கூட முடியாது
இதுபற்றி விரிவாக பேசியுள்ள அவர், "படப்பிடிப்பிற்காக உடற்பயிற்சியில் இருந்த போது எனது வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல இருந்தது. நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தூங்கிவிட்டேன். ஆனால், காலையில் எழும்பும் போது இடது காலிலும் அப்படி வலி ஏற்பட்டது. அப்போது என்னால் உட்காரவோ எழுந்து நிற்கவோ ரொம்பவே கஷ்டப்பட்டேன். அதன்பிறகு தான் அவசர அவசரமாக மருத்துவமனை சென்றேன்" எனக் கூறியுள்ளார்.

நான் அனுபவித்த வேதனை
மேலும், "மருத்துவமனையில் பரிசோதனை செய்த பின்னர் தான், அது தசை நார் அழற்சி நோய் என்பதே தெரியவந்தது. இருந்தாலும் அதனை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சென்று பரிசோதித்தேன். ஆனால், அப்போது அது மயோசிடிஸ் இல்லை என்பது உறுதியானது. ஆனாலும், அந்த நேரங்களில் நான் அனுபவித்த வேதனைகள் கொஞ்சம்நஞ்சமல்ல. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போதுதான் சமந்தா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதை உணர முடிகிறது" என உருக்கமாகக் கூறியுள்ளார் பியா பாஜ்பேய். அவரின் இந்த பேட்டி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. மேலும், சமந்தா இதிலிருந்து மீண்டு வருவார் எனவும் அவர்கள் நம்பிக்கையுடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











