'என்னைப் பாத்த பிறகுதான் கப்பக் கிழங்குன்னு பாடனீங்களா ராஜா சார்?'- நடிகை ராதா
இளையராஜா இசையில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம்பெற்ற வாடி என் கப்பக் கிழங்கே பாடல் ரொம்பவே பாப்புலர். இந்த பாடல் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை நடிகை ராதா சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.
இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற நடிகை ராதா, மேடை ஏறியதும், "இளையராஜா மாதிரி இசை மேதைகளை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு என்னைப் போன்ற நடிகைகளுக்குக் கிடைப்பது அரிது. ஆனால் நான் கொடுத்து வைத்தவள். என் முதல் படத்துக்கு இசையே அவர்தான். அது மட்டுமல்ல, அந்தப் படத்தின்போது நடந்த ஒரு சின்ன சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.

அலைகள் ஓய்வதில்லை படத்துக்கு நான்தான் நாயகி என்று முடிவான பிறகு, என்னை பிரசாத் ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்தார் பாரதிராஜா. அங்கே என்னை இளையராஜாவுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது என்னைப் பார்த்த ராஜா சார், "இதான் அந்த கப்பக் கிழங்கா?' என்று கேட்டார். ராஜா சார் என்னைப் பார்த்த பிறகுதான் அந்தப் பாட்டு போட்டீங்களா?", என்று கேட்டார் சிரித்தபடி.
இதை மேடைக்கு கீழிருந்து கேட்டுக் கொண்டிருந்த இளையராஜா, "சேச்சே.. அப்படியெல்லாம் இல்லம்மா. உண்மையில் அந்தப் படத்துக்கு ஹீரோயின் யார்னு தெரிவதற்கு முன்பே அந்தப் பாடல் எழுதி இசையமைக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் அப்படிக் கேட்டேன்," என்றார் இளையராஜா தனக்கே உரிய புன்முறுவலுடன்.


Click it and Unblock the Notifications











