போலீஸாரிடம் அடிவாங்கிய இசையமைப்பாளர்.... வேண்டுமென்றே வேடிக்கை பார்த்த ஜெயம் ரவி பட இயக்குனர்!
அடங்க மறு படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
சென்னை : அடங்க மறு படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். போலீசாரிடம் அடிவாங்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் கார்த்திக் தங்கவேல் இயக்கிய அடங்க மறு படம் கடந்த மாதம் 21ம் தேதி ரிலீசானது. இப்படத்துடன் மாரி 2, சீதக்காதி, கனா, கேஜிஎஃப், சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் வெளியாகின.
இதில் அடங்கமறு படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதனை கொண்டாடும் வகையில் அடங்க மறு படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.

அடங்க மறு வெற்றி விழா
இதில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா, அழகம் பெருமாள், முனிஸ்காந்த், மைம் கோபி, இயக்குனர் கார்த்திக் தங்கவேல், இசையமைப்பாளர் சாம் சிஎஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது இசையமைப்பாளர் சாம் சிஎஸ், மதுரையில் தான் அடிவாங்கிய சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார்.

மதுரை தியேட்டர்
இதுகுறித்து அவர் பேசியதாவது, " பொதுவாக நான் எந்த படத்துக்கும் தியேட்டர் விசிட் சென்றதில்லை. ஆனால் அடங்க மறு படத்துக்காக மதுரைக்கு தியேட்டர் விசிட் சென்றிருந்தேன். அப்போது அங்கு கடுமையான கூட்டம் நிலவியது.

அடி வாங்கினேன்
ஜெயம் ரவியும், இயக்குனரும் முன்னே சென்றுவிட்டனர். நான் அவர்களுக்கு பின்னே சென்று கொண்டிருந்தேன். அப்போது போலீசார் கூட்டத்தை கலைப்பதற்காக லத்தியால் அடித்தபோது, என் மீதும் பட்டது. இதை இயக்குனர் கார்த்திக் தங்கவேல் பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர தடுக்கவில்லை" எனக் கூறினார்.

இயக்குனர் கார்த்திக் தங்கவேல்
அவரை தொடர்ந்து பேசிய இயக்குனர் கார்த்திக் தங்கவேல், "நான் வேண்டுமென்று தான் சாமை அடிவாங்கவிட்டேன். ஒரு அடி வாங்கவிட்டு தான், அவர் யார் என்பதை போலீசாரிடம் கூறினேன்", என்றார்.

என்ன பிரச்சினை
இதைக்கேட்டு விழாவுக்கு வந்திருந்தவர்கள் வியப்படைந்தனர். இருவருக்குள்ளும் அப்படி என்ன பிரச்சினை இருக்கிறது என தெரியவில்லையே என பேசிக்கொண்டனர். ஆனால் தான் அடிவாங்கியதை சந்தோஷமாகவே எடுத்துக்கொண்டதாக இசையமைப்பாளர் சாம் கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











