உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா?: ஐஸ்வர்யா பட டீலுக்கு ராணுவம் எதிர்ப்பு
டெல்லி: ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் பாகிஸ்தான் நடிகரை நடிக்க வைத்ததற்கு பரிகாரமாக ராணுவ நல நிதிக்கு ரூ. 5 கோடி நிதி அளிக்க வேண்டும் என்ற ராஜ் தாக்கரே கட்சி நிர்பந்தனைக்கு ராணுவத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கரண் ஜோஹார் இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பவாத் கான் நடித்துள்ளதால் அதை வெளியிட ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் படத்தை வெளியிட நவநிர்மன் சேனா மூன்று நிபந்தனைகள் விதித்தது. அதை கரணும் ஏற்றுக் கொண்டார்.

ரூ. 5 கோடி
படத்தில் பாகிஸ்தான் நடிகரை நடிக்க வைத்ததற்கு பரிகாரமாக ராணுவ நல நிதிக்கு ரூ. 5 கோடி கொடுக்க வேண்டும் என்று நவநிர்மன் சேனா விதித்த நிபந்தனையை கரண் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ராணுவம்
நவநிர்மன் சேனா, கரணிடையேயான இந்த ஒப்பந்தத்திற்கு ராணுவ அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராணுவ நல நிதிக்கு தானாக விரும்பி நிதி அளிக்க வேண்டுமே தவிர பரிகாரத்திற்காக அல்ல என மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்
அவர்களின் அரசியலில் ராணுவத்தை இழுத்துள்ளது வேதனை அளிக்கிறது. ராணுவத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை. அதனால் ராணுவத்தை அரசியலுக்கு இழுப்பது தவறு என்று மற்றொரு ராணுவ அதிகாரி கூறியுள்ளார்.

முடியாது
மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா விதித்துள்ள நிபந்தனை சரியில்லை. இதை ராணுவம் ஒருபோதும் ஆதரிக்காது என முன்னாள் ராணுவ செயலாளர் ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் செய்யது அத்தா ஹஸ்னைன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











