16 ஆண்டுகளுக்கு பின் திரையில் ஒன்று சேரும் சூர்யா–ஜோதிகா...எந்த படத்தில் தெரியுமா?
சென்னை : கோலிவுட்டின் சூப்பர் ஹிட் லவ் ஜோடியான சூர்யா - ஜோதிகா 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் ஒன்று சேர்ந்து நடிக்க போகிறார்களாம். அதுவும் தமிழ் சினிமாவையே அதிர வைத்த கலக்கல் டைரக்டரின் படத்திலாம்.
வரிசையாக சிறப்பான, மாஸ் ஹிட் படங்களை கொடுத்து சர்வதேச கவனத்தை தமிழ் சினிமா பக்கம் ஈர்த்து வருகிறார் சூர்யா. சதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று, டி.ஜெ.ஞானவேல் இயக்கத்தில் ஜெய்பீம் என வரிசையாக ஹிட் கொடுத்து வருகிறார். இந்த இரு படங்களுமே ஓடிடி.,யில் ரிலீசாக கடும் எதிர்ப்புக்களையும், சர்ச்சைகளையும் சந்தித்தன.

அடுத்த மாஸ் ஹிட் ரெடி
இருந்தாலும் அத்தனையும் தாண்டி சர்வதேச அங்கீகாரம், சர்வதேச விருதுகளை பெற்று, ஆஸ்கார் வரை சென்று வந்துள்ளன. அடுத்தபடியாக எதற்கும் துணிந்தவன் படத்தின் மூலம் மற்றொரு மெகா கமர்ஷியல் என்டர்டைன்மென்ட் ஹிட்டிற்கு தயாராகி உள்ளார் சூர்யா. இந்த படம் மார்ச் 10 ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.

சூர்யா கைவசம் உள்ள படங்கள்
பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், சுதா கொங்கராவுடன் மற்றொரு படம், சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்த படம் என வரிசையாக கமிட்டாக அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறார் சூர்யா. இதில் ஒவ்வொரு படங்களுக்கு ஏற்றவாறு கெட்அப் வேறு மாற்றி வருகிறார் சூர்யா.

மூன்றாவது முறையாக விருது கூட்டணி
இந்த படங்களுக்கு இடையே டைரக்டர் பாலா நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கும் படம் ஒன்றிலும் சூர்யா நடிக்க போவதாக ஏற்கனவே கூறப்பட்டது. முதலில் இதில் கெஸ்ட் ரோலில் தான் சூர்யா நடிப்பதாக இருந்தது. பிறகு அவரையே லீட் ரோலில் நடிக்க வைக்க பாலா முடிவு செய்து விட்டதாக கூறப்பட்டது. நந்தா, பிதாமகன் என சூர்யாவிற்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்த இரண்டு படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக பாலா-சூர்யா கூட்டணி இணைய உள்ளது. இதில் பிதாமகன் படத்திற்காக விக்ரமிற்கு தேசிய விருது கிடைத்தது.

பாலா-சூர்யா படம் எப்போது
சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் பேனரில் உருவாக உள்ள இந்த படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதியில் துவங்கப்பட உள்ளதாம். இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன் சூர்யாவின் தங்கை ரோலில் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

மீண்டும் இணையும் ரியல் ஜோடி
தற்போது பெரிய பிரேக்கிங் நியூசாக, இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அவரது காதல் மனைவி ஜோதிகாவே நடிக்க போகிறாராம். 2006 ல் வெளியான சில்லுன்னு ஒரு காதல், ஜுன் ஆர் ஆகிய படங்களில் தான் கடைசியாக சூர்யா - ஜோதிகா சேர்ந்து நடித்தார்கள். அதற்கு பிறகு இருவரும் பல படங்களில் பிஸியாக நடித்தாலும், ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை. ஜோதிகா இதற்கு முன் பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் நடித்தார்.

16 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா-ஜோதிகா
நிஜத்தில் கணவன் - மனைவியான பிறகு கிட்டதட்ட 16 ஆண்டுகள் கழித்து சூர்யாவும், ஜோதிகாவும் இந்த படத்தில் இணைய உள்ளனர். திருமணத்திற்கு முன்பு இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காக்க காக்க, பேரழகன் உள்ளிட்ட பல படங்கள் செம ஹிட் ஆகி உள்ளன.இந்த ஜோடியை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











