18 வருடங்களுக்குப்பின் மோகன்லாலுடன் இணையும் கவுதமி
சென்னை: பாபநாசம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிகை கவுதமி மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் 18 வருடங்களுக்குப் பின்னர் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார் கவுதமி.

தேசிய விருதுபெற்ற தெலுங்கு இயக்குநர் சந்திரசேகர் எலேதி இந்தத் தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார். 9 வருடங்களுக்குப் பின்னர் பாபநாசம் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்த கவுதமி தற்போது அடுத்தடுத்த படங்களில் ஆர்வமாக இருக்கிறார்.
நவம்பர் 3 வது வாரத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 21 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் பாலகிருஷ்ணா படமொன்றில் நடித்திருந்தார்.
அதற்குப்பின் தற்போது 2 வது முறையாக மீண்டும் தெலுங்கு தேசத்தில் இந்தப் படம் மூலமாக ரீ-என்ட்ரி ஆகிறார் மோகன்லால்.
படங்கள் தவிர புகழ்பெற்ற மலையாள சேனலில் ரியாலிட்டி ஷோ ஒன்றிற்கும் கவுதமி நடுவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இயக்குநர் மணிரத்னத்தின் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றான இருவர் திரைப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து கவுதமி நடித்திருந்தார்.
18 வருடங்கள் கழித்து மோகன்லால்- கவுதமி இருவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.


Click it and Unblock the Notifications











