26 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஜோடி சேரும் பிரபு- கவுதமி!
சென்னை: ராஜா கைய வச்சா படத்திற்குப் பிறகு சுமார் 26 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பிரபு மற்றும் கவுதமி இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்க உள்ளனர்.
80களில் ரஜினி, கமல், பிரபு என முன்னணி தமிழ் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் கவுதமி. திருமணத்திற்குப் பின் சினிமாவை விட்டு விலகிய இவர், டிவி சீரியல் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து கமல் ஜோடியாக பாபநாசம் படத்தில் நடித்தார் கவுதமி. தற்போது இவர் மோகன்லாலுடன் சேர்ந்து நடித்த நமது படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்நிலையில், மீண்டும் நேரடித் தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம் கவுதமி. இப்படத்தில் கவுதமிக்கு ஜோடியாக பிரபு நடிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் இந்த ஜோடி சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கடந்த 1990ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ராஜா கைய வச்சா படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர்.
பிரபுவும், கவுதமியும் சேர்ந்து நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், இந்தப் புதிய படத்தின் இயக்குநர் யார், மற்ற நடிகர்களின் விபரங்கள் உள்ளிட்டவை இன்னும் தெரியவரவில்லை. இன்னும் ஒரு சில நாட்களில் இந்தப் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.


Click it and Unblock the Notifications











