மைக்கேல் மதன காம ராஜனை உருவாக்கியது எப்படி...30 ஆண்டுகளுக்கு பின் கமல் வெளியிட்ட ரகசியம்
சென்னை : இந்திய அளவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் மட்டுமல்ல, இந்திய சினிமா வரலாற்றிலும் அழுத்தமான தடம் பதித்த நடிகர் கமல்ஹாசன். கடந்த 40 ஆண்டுகளில் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த பல படைப்புக்களை உருவாக்கிய பெருமை கமலுக்கு உண்டு.
அப்படி அவர் உருவாக்கிய மிகப் பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று தான் 'மைக்கேல் மதன காமராஜன்'. இந்த படம் ரிலீசாகி 30 ஆண்டுகள் ஆகி விட்டது. மிகப் பெரிய வெற்றி படம் என்பதை தாண்டி, பலரின் எவர்க்ரீன் ஃபேவரைட் காமெடி படங்களில் இதுவும் ஒன்று.
ஒரு சில காட்சிகள் தவிர மற்றபடி படம் முழுக்க ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த படம் மைக்கேல் மதன காமராஜன் படம். இதில் கமல் 4 வேடங்களில் நடித்திருப்பார். அதிலும் படத்தின் பிற்பகுதியில் கெட்அப்பை மட்டும் மாற்றி, நான்கு கேரக்டரையும் வித்தியாசப்படுத்தி காட்டி இருப்பார் கமல்.

திரைக்கதை எழுதி கமல்
சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பேனரில் பஞ்சு அருணாச்சலத்தின் மனைவி மீனா தயாரித்திருந்தார். திரைக்கதையை கமலே எழுதினார். வசனங்களை கிரேஸி மோகன் எழுதி இருந்தார். மனோரமா, ரூபினி, குஷ்பு, ஊர்வசி, நாசர், நாகேஷ், சந்தான பாரதி என பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருக்கும்.

வெள்ளி விழா கொண்டாடிய படம்
1990 ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடப்பட்ட இந்த படம் தொடர்ந்து 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. இந்த படத்தில் 4 கேரக்டர்கள் ஏற்பட நான்கு விதமாக உச்சரிப்புக்களை மாற்றி கமல் நடித்திருந்தார். கமல் கேட்டுக் கொண்டதால் இந்த படத்திற்காக ஊர்வசி தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசி இருந்தார்.

பாடல்களில் என்ன ஸ்பெஷல்
இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதில் "சுந்தரி நீயும்" பாடல் முழுக்க முழுக்க ஸ்லோ மோஷனில் எடுக்கப்பட்டது. முற்றிலும் ஸ்லோமோஷனில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் பாடல் இது தான். யேசுதாஸ் பிஸியாக இருந்ததால் இந்த பாடலை கமலே பாடினார். "ரம்பம்பம்" பாடலுக்கு பிரபுதேவா தான் நடனம் அமைத்திருந்தார்.

பிரம்மாண்ட க்ளைமேக்ஸ்
இந்த படத்தின் க்ளைமேக்சிற்காக 3 இடங்களில் செட் போடப்பட்டது. வீட்டின் உள்ளே நடக்கும் காட்சிகள் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட செட்டில் படமாக்கப்பட்டது. மற்றொன்று குன்னூரில் 30 அடி உயரத்தில் மலை உச்சியில் அமைக்கப்பட்டது. இதற்காக ஒட்டுமொத்த டீமும் கணித நிபுணர்களை போல் கணக்கிட்டு, ஆய்வு செய்துள்ளது.

ரீ மியூசிக் செய்த யுவன்
மைக்கேல் மதன காமராஜன் படத்திற்காக இளையராஜா இசையமைத்த "வச்சாலும் வைக்காம போனாலும்" பாடலை, 30 ஆண்டுகளுக்கு அவரது மகன் யுவன்சங்கர் ராஜா தற்போது 'டிக்கிலோனா' படத்திற்காக ரீ மியூசிக் செய்துள்ளார். இந்த படத்தில் நாகேஷ் பேசிய "பீம் பாய்" வசனம் மிக பிரபலம். இந்த வசனம் பல படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரகசியத்தை உடைத்த கமல்
ரிலீசாகி 30 ஆண்டுகள் ஆன பிறகு இந்த படம் உருவாக்கப்பட்ட விதம் உள்ளிட்ட இந்த படம் பற்றிய பல ரகசியங்களை கமல் இன்று இன்ஸ்டாகிராமில் விளக்கமாக பகிர்ந்துள்ளார். சமீபத்தில், மைக்கேல் மதன காமராஜன் படத்தை எப்படி படமாக்கினீர்கள் என்ற ரகசியத்தை கேட்ட பிரேமம் பட டைரக்டர் அல்ஃபோன்ஸ் புத்திரன், இந்த படத்தை பட இயக்கத்தின் பட்ட படிப்பு போன்றது என புகழ்ந்திருந்தார்.


Click it and Unblock the Notifications











