மம்முட்டியை தொடர்ந்து சுரேஷ்கோபிக்கும் கொரோனா... கவலையில் மலையாள திரையுலகம்
திருவனந்தபுரம் : கோலிவுட், பாலிவுட் பிரபலங்களைத் தொடர்ந்து தற்போது மலையாள திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அனைவரையும் கவலையடைய வைத்துள்ளது.
மலையாள திரையுலகில் சமீபத்தில் தான் நடிகை சோபனாவிற்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரைத் தொடர்ந்து டாப் ஹீரோவான மம்முட்டிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. டாக்டர்களின் வழிகாட்டுதலின் பேரில் தற்போது வீட்டு தனிமையில் இருப்பதாக அவரே ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

சுரேஷ் கோபிக்கு கொரோனா
இந்நிலையில் பிரபல மலையாள நடிகரும், ராஜ்யசபா எம்பி.,யுமான சுரேஷ் கோபி, தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தனக்கு லேசான காய்ச்சல் மட்டும் இருப்பதாகவும், மற்றபடி தான் நலமாக இருப்பதாகவும், ஆரோக்கியமாக உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டம் கூடாதீர்கள்
இந்த சூழலில் அனைவரும் சமூக இடைவெளியை கடுமையாக பின்பற்ற வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். நீங்களும் பாதுகாப்பாக இருந்து, பாதிக்கப்படாத பிறரையும் பாதுகாப்பாக வையுங்கள் எனவும் சுரேஷ் கோபி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஷுட்டிங்கில் பிஸி
அரசியல், சினிமா என இரண்டிலும் பிஸியாக இருந்து வரும் சுரேஷ் கோபி நடித்த காவல் படம் தான் கடைசியாக ரிலீசானது. ஜோஷி இயக்கத்தில் அவர் நடித்து வரும் பாப்பான் படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியன ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றன.

கலக்கத்தில் திரையுலகினர்
பிஸியாக ஷுட்டிங்கில் ஈடுபட்டு வரும் முன்னணி நடிகர்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். அதிலும் முக்கிய விழாவில் கலந்து கொண்ட அடுத்த நாளே அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால், திரையுலகை சேர்ந்த பலரும் கலக்கத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











