உறுதியான நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து...ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் ?
ஐதராபாத் : தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும், தெலுங்கில் சாகுந்தலம் படத்திலும் நடித்து வருகிறார். தி ஃபேமிலிமேன் வெப் சீரிசுக்கு பிறகு சமந்தாவிற்கு பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகர்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவை காதலித்து, 2017 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பல கோடிகள் செலவழித்து மிக பிரம்மாண்டமாக கோவாவில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் சமந்தா, பிஸியாக பல படங்களில் நடித்து வந்தார்.

வதந்தியின் ஆரம்பம்
நாக சைதன்யாவும் தெலுங்கில் சாய் பல்லவியுடன் லவ் ஸ்டோரி, பாலிவுட்டில் அமீர்கானுடன் படம் என பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு ஜுலை மாதம் 25 ம் தேதி சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்த தனது டிஸ்ப்ளே பெயரை எஸ் என மாற்றினார் சமந்தா. திருமணத்திற்கு பிறகு தனது பெயரின் பின்னால் இருந்த அக்கினேனியையும் நீக்கினார் சமந்தா.

பிரிந்து வாழ்ந்த தம்பதி
இதனால் சமந்தா, நாக சைதன்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் பல வகைகளில் தகவல் பரவியது. இவர்களை சேர்த்து வைக்க நாகர்ஜுனா உள்ளிட்ட அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முயற்சி செய்தும் அது தோற்று விட்டதாகவும் கூறப்பட்டது. சமந்தா - நாக சைதன்யாவின் விவாகரத்து வழக்கு குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.

யாரும் வாய் திறக்கவில்லை
பல முறை கோர்ட்டால் கவுன்சிலிங் அளிக்கப்பட்டும் பிரியும் முடிவில் சமந்தா, நாக சைதன்யா இருவரும் உறுதியாக இருந்ததாகவும், விவாகரத்திற்கு பிறகு ஜீவனாம்சமாக சமந்தாவிற்கு ரூ.50 கோடி வழங்கப்பட உள்ளதாகவும் கூட கூறப்பட்டது. ஆனால் இந்த வதந்திகள் பற்றி எந்த உறுதியான தகவலும் இல்லை. அதே சமயம் இந்த தகவல்களை நாகர்ஜுனா குடும்பத்தை சேர்ந்தவர்களும், சமந்தா தரப்பை சேர்ந்தவர்களும் மறுக்கவும் இல்லை.

இது தான் விவாகரத்துக்கு காரணமா
திருமணத்திற்கு பிறகு சமந்தா படங்களில் நடிப்பதையும், கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்துவதையும் நாகர்ஜுனாவின் குடும்பத்தினர் விரும்பவில்லையாம். ஆனால் பலமுறை சொல்லியும் நடிப்பை கைவிட சமந்தா மறுத்து விட்டாராம். அதிலும் தி ஃபேமிலிமேன் படத்தில் இலங்கை பெண்ணாக சமந்தா நடித்த கேரக்டர் நாகர்ஜுனா குடும்பத்தில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தியதாம். இது தான் சமந்தா - நாகசைதன்யா பிரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது. திருமணத்தின் போது நாகசைதன்யாவிடம், திருமணத்திற்கு பிறகும் சமந்தா படங்களில் நடிப்பாரா என கேட்டதற்கு, அது அவருடைய விருப்பம் என கூறி இருந்தார்.

எதுவும் உண்மையில்லை
சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்வி கேட்க வேண்டாம் என நாக சைதன்யா மிக மன வேதனையோடு பேசி உள்ளார். அதே சமயம் திருப்பதி கோயில் வாசலில் விவாகரத்து பற்றி கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை கோபமாக திட்டிய சமந்தா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் பேசிய போது, நூற்றுக்கணக்கான வதந்திகள் வருகிறது. அவை எதுவும் உண்மையில்லை என்றார். இதனால் விவாகரத்து என கூறப்படுவது வதந்தி மட்டுமே என ரசிகர்கள் நினைத்தனர். இருந்தாலும் அக்டோபரில் சமந்தா - நாகசைதன்யாவின் விவாகரத்து விவகாரம் முடிவுக்கு வர உள்ளதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரகசிய தகவல்கள் கூறப்பட்டது.

பிரிவை அறிவித்த நாக சைதன்யா
இந்நிலையில் கிட்டதட்ட 3 மாதங்களாக நிலவி வந்த விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் நாக சைதன்யா, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தானும், சமந்தாவும் பிரிய போவதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தங்களின் நிலைமையை புரிந்து கொண்டு, தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை காயப்படுத்தாமல் இருக்க ரசிகர்கள், பத்திரிக்கையாளர் அனைவரும் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுளார்.

டிரெண்டிங் ஆன ஜோடி
நாகசைதன்யா, தங்களின் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் Samanth, nagachaithanya, ChaySam போன்ற ஹாஷ்டேகுகள் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டன. 2017 ம் ஆண்டு அக்டோபர் 6 ம் தேதி நாக சைதன்யா - சமந்தாவின் திருமணம் நடைபெற்றது. தற்போது அதே அக்டோபரில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ரசிகர்கள் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.

சமந்தாவிற்கு ரசிகர்கள் ஆதரவு
பெரும்பாலானவர்கள் பிரிவு பற்றி நாக சைதன்யா ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பை தான் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இதில் அனேகமானவர்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என சமந்தாவிற்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். பெண்களிடம் அவர்களின் விருப்பம் என சொல்பவர்கள், பிறகு தங்களின் விருப்பங்களை அவர்கள் மீது கட்டாயப்படுத்தி, திணிக்கிறார்கள் எனவும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











