ராஜமெளலி இல்லைன்னா.. பிரபாஸுக்கு மட்டுமல்ல ராம்சரணுக்கும் சிக்கல் தான் போல? சொதப்பிய ஆச்சார்யா!
சென்னை: பாகுபலி படம் மூலம் பிரபாஸுக்கு மிகப்பெரிய வெற்றியை இயக்குநர் ராஜமெளலி பெற்றுத் தந்தார்.
இந்த ஆண்டு வெளியான RRR திரைப்படம் ராம்சரணுக்கு 1100 கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்நிலையில், அப்பா சிரஞ்சீவி உடன் ராம்சரண் நடித்துள்ள ஆச்சார்யா திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

சொதப்பிய பிரபாஸ்
பாகுபலி முதல் மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம் மூலம் 2500 கோடிக்கும் மேல் அதிக வசூலை ஈட்டி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார் நடிகர் பிரபாஸ். சிக்ஸ் பேக் உடம்பில் சிவன் சிலையை தூக்கிச் செல்லும் போதே மொழிகளை கடந்து ரசிகர்களை சம்பாதித்து விட்டார். ஆனால், அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் என இரு படங்களும் பெரிய சொதப்பல் ஆக மாறி உள்ளன.

ராம்சரண் ராஜ்ஜியம்
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்தியளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்தது. 1100 கோடி ரூபாய்க்கும் மேல் அதிக வசூலை அள்ளி அந்த படம் மிகப்பெரிய சாதனையை படைத்தது. கிளைமேக்ஸில் வரும் அல்லூரி சீதாராமராஜுலு லுக்கில் ராம்சரணை பாலிவுட் ரசிகர்கள் எல்லாம் ராமராகவே பார்த்தனர்.

ஆச்சார்யா அவுட்
ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூட்டோடு சூடாக ஆச்சார்யா படத்தை இறக்கி பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து விடலாம் என ராம்சரண் மற்றும் சிரஞ்சீவி போட்ட திட்டம் தற்போது வீணாக போய் விட்டது. ஆச்சார்யா படத்திற்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனங்களால் படம் முதல் நாளில் கூட பெரிய தொகையை வசூல் செய்யவில்லை. பான் இந்திய படமாக வெளியாகாமல் தெலுங்கில் மட்டும் வெளியான இந்த படம் முதல் நாளில் 7.99 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜமெளலி இல்லைன்னா
பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி இல்லை என்றால் பிரபாஸ் மட்டுமில்லை ராம்சரணுக்கு ஆபத்து தான் என்கிற நிலை தெளிவாக தெரிகிறது. பாகுபலி, RRR படங்கள் மூலம் தெலுங்கு சினிமாவை இந்தியாவை தாண்டி உலக அளவிற்கு கொண்டு சென்ற பெருமை ராஜமெளலியை சேரும். அதனால் தான் RRR 2 எடுக்கலாம் என்கிற கோரிக்கையையே ராம்சரணும், ஜூனியர் என்டிஆரும் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த் நீல் இருக்காரு
சாஹோ, ராதே ஷ்யாம் சொதப்பிய நிலையில், பிரபாஸ் அடுத்ததாக கேஜிஎஃப் 2 பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தில் நடித்து வருகிறார். நிச்சயம் அந்த படம் பிரபாஸுக்கு சரியான கம்பேக்காக இருக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். கேஜிஎஃப் படத்தை தாண்டியும் பிரசாந்த் நீல் சாதிப்பார் என்பதை அவரும் நிரூபிக்க ஒரு வாய்ப்பு.
Recommended Video

ராம்சரணுக்கு ஷங்கர்
மகேஷ் பாபு படத்தில் அடுத்ததாக ராஜமெளலி பிசியாகி உள்ளார் என்பதை அறிந்து கொண்டு தான் அடுத்ததாக அடுத்த பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தனது 15வது படத்தில் நடித்து வருகிறார். RRR படத்தின் வசூல் சாதனையை RC 15 படம் முறியடித்தால் தான் ராம்சரண் ரியல் மெகா பவர் ஸ்டார் என்று சொல்லிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











