தியேட்டர் திறந்தும் பட ரிலீஸ் இல்லை...வெறுமனே போன வெள்ளிக்கிழமை...ஏமாற்றத்தில் ரசிகர்கள்
சென்னை : கொரோனா, லாக்டவுன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே திரையுலகமே முடங்கி உள்ளது. துவங்கிய படங்களின் வேலைகளை குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து முடிக்க முடியாமலும், முடித்த படங்களையும் வெளியிட முடியாமலும் பட தயாரிப்பாளர்கள் திணறி வருகின்றனர்.
கடந்த ஆண்டே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டிய பல படங்கள் தியேட்டர்கள் பல மாதங்களாக மூடப்பட்டதால் இதுவரை ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கி உள்ளன. இன்னும் சில படங்கள் தியேட்டர் ரிலீசா அல்லது ஓடிடி ரிலீசா என முடிவு செய்யப்படாமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களை திறக்க தமிழக அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இதன்படி ஆகஸ்ட் 23 ம் தேதி முதல், 50 சதவீதம் பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

ஏமாற்றமடைந்த ரசிகர்கள்
தியேட்டர்கள் திறப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள், முன்னணி நடிகர்களின் படங்களின் தியேட்டர் ரிலீஸ் தேதி அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்காதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. நீண்ட காலமாக காத்திருக்கும் படங்களை வெளியிட நல்ல வாய்ப்பு கிடைத்தும் ஏன் தயாரிப்பாளர்கள் படங்களின் ரிலீசை அறிவிக்கவில்லை என குழப்பமும் ஏற்பட்டது.

ரிலீஸ் இல்லாத வெள்ளிக்கிழமை
பொதுவாக புதுப்படங்கள் வெள்ளிக்கிழமைகளில் தான் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படும். ஆனால் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட பிறகு வந்த முதல் வெள்ளிக்கிழமையான நேற்று எந்த தமிழ் படமும் ரிலீசாகவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

தயங்கும் தயாரிப்பாளர்கள்
இதற்கு என்ன காரணம் என கோலிவுட் வட்டாரங்களில் விசாரித்த போது, அவர்கள் தற்போதைய சூழலை தான் காரணமாக சொல்கிறார்கள். உடனடியாக எப்படி தயாரிப்பாளர்கள் படத்தை ரிலீஸ் செய்வார்கள். ஓடிடி படங்களை போல் தியேட்டர் ரிலீஸ் படங்களுக்கும் விளம்பரம் தேவைப்படுகிறது. அது மட்டுமில்லாமல் தற்போது வரை நிலையில்லாத சூழலே திரையுலகில் காணப்படுகிறது.

குழப்பத்தில் படங்கள்
உடனடியாக மக்கள் தியேட்டர் பக்கம் வருவார்களா என்ற தயக்கம் காரணமாக உடனடியாக படத்தை ரிலீஸ் செய்யலாமா அல்லது நிறுத்தி வைத்து கொஞ்ச காலம் பொறுக்கலாமா என்ற குழப்பத்திலும் உள்ளனர்.

பணம் இல்லை
புதிய படங்களை வாங்க தங்களிடம் பணம் இல்லை என விநியோகஸ்தர்களும் தெளிவாக கூறி விட்டனர். சில எளிமையான ஒப்பந்தங்கள், வசூலில் 5 சதவீதம் கமிஷன் ஆகியவைகள் கொடுத்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்வோம் என கூறி உள்ளனர். இது மிகப் பெரிய சவாலாக இருப்பதாக தயாரிப்பாளர் தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.

பொறுத்திருந்து தான் முடிவு
முதல் இரண்டு வாரங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மக்கள் வருகை எப்படி உள்ளது என்பதை பொறுத்தும், படங்களை ரிலீஸ் செய்யலாம் என்ற நம்பிக்கை வந்த பிறகே படங்களை ரிலீஸ் செய்ய உள்ளோம் என விநியோகஸ்தர் நாகநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் படங்கள் இல்லை
முதல் சில வாரங்களுக்கு ஹாலிவுட் படங்களை மட்டுமே ரிலீஸ் செய்ய உள்ளோம். சமீபத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பெல்பாட்டம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமாக இந்தி படங்களுக்கு வரும் ரசிகர் கூட்டத்தை போலவே 40 சதவீதம் பேர் வந்துள்ளனர். இது புதிய படங்களின் ரிலீசை ஊக்குவிப்பதாக உள்ளது.

விநாயகர் சதுர்த்தி தான் குறி
ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பண்டிகை நாட்களையே குறிவைத்துள்ளனர். அதனால் விநாயக சதுர்த்தி சமயமான செப்டம்பர் 10 ல் தமிழ் படங்கள் ரிலீஸ் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

3 படங்கள் ரிலீஸ்
விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாட்களை குறிவைத்தே விஜய் சேதுபதியின் லாபம், கங்கணாவின் தலைவி ஆகிய படங்கள் தியேட்டர் ரிலீசை அறிவித்துள்ளன. மற்றொரு படமும் இதில் இணைய வாய்ப்புள்ளது என தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.

சிறிய பட்ஜெட் படங்களின் நிலை
அதே சமயம் சிறிய பட்ஜெட் படங்கள், தியேட்டர் ரிலீசுக்கு முன், தங்கள் முதலீடுகளை திரும்ப பெறும் வகையில் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமங்களை விற்க யோசித்து வருகின்றன. ஆனால் டிவி சேனல்கள் கடந்த 6 மாதங்களாக சிறிய பட்ஜெட் படங்களை வாங்குவதை நிறுத்தி விட்டன. தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால், படங்களின் ரிலீஸ் உறுதியாகாததால் சிறிய படங்களில் முதலீடு செய்ய விரும்பவில்லை.

ஓடிடி ஆர்வமா
நேரடி ஓடிடி ரிலீஸ் படங்களை வாங்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் தான் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட படங்கள் தியேட்டர் திறக்கக்கப்பட்ட உடனேயே ரிலீஸ் செய்யப்படாமல் இருப்பதற்கு காரணம் என நாகநாதன் தெரிவித்துள்ளார்.

பெரிய படங்கள் தயாராகவில்லை
கடந்த முறை லாக்டவுனிற்கு பிறகு விஜய்யின் மாஸ்டர் படம் பொங்கலுக்கு ரிலீசாகி நல்ல வசூலை பெற்று, அனைவருக்கும் நம்பிக்கை கொடுத்தது. ஆனால் இந்த முறை பெரிய படங்கள் எதுவும் ரிலீசுக்கு தயாராக இல்லை. அதனால் சிறிய படங்கள் ரிலீஸானால் தான் உண்டு. ஆனால் பலர் இன்னும் தங்களின் சேட்டிலைட் உரிமங்களை விற்காமல் உள்ளதால் பட ரிலீசை தள்ளி போட்டு வருகிறார்கள்.

சேட்டிலைட் உரிமம் யாருக்கு
கோடியில் ஒருவன் படத்தின் சேட்டிலைட் உரிமம், தெலுங்கு உரிமம் விற்கப்பட்டு விட்டதால் செப்டம்பரில் ரிலீசை உறுதி செய்து விட்டனர். ருத்ர தாண்டவமும் தியேட்டருக்கு வர உள்ளது. ஆனால் அவர்களின் சேட்டிலைட் உரிமம் இதுவரை விற்கப்படாததால் அக்டோபரில் ரிலீசாக வாய்ப்புள்ளது. ஹிப்ஹாப் தமிழாவின் சிவக்குமாரின் சபதம் படத்திற்கும் இதே நிலை தான்.

இவர்கள் தான் எங்கள் குறி
லாக்டவுனுக்கு முன்பு வரை வாரத்திற்கு 4 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. இந்த ஆண்டில் 240 படங்கள் ரிலீஸ் செய்ய வேண்டும். ஆனால் லாக்டவுன் சமயத்தில் 12 க்கும் மேற்பட்ட படங்கள் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டு விட்டன. தெலுங்கு ரிலீஸ் படங்களுக்கு 50 சதவீதம் ரசிகர்கள் வருகிறார்கள். இதனால் தமிழ் படங்களுக்கும் அந்த வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். 18 முதல் 25 வயதுடைய ரசிகர்களை குறிவைத்தே தாங்கள் படங்களை ரிலீஸ் செய்ய தயாராகி வருவதாக சில தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











