இளையராஜாவை மோசடி செய்யும் இன்னுமொரு இசை நிறுவனம்? - அதிரவைக்கும் குற்றச்சாட்டு
இளையராஜா சார் மட்டும் ராயல்டி விஷயங்களில் இப்போதுள்ளவர்களைப் போல கடுமையாக நடந்து கொண்டிருந்தால், இன்றைக்கு பில் கேட்ஸை விட பெரிய கோடீஸ்வரராகியிருப்பார்.
ஆனால் அவர் தனக்கான ராயல்டி பற்றி கவலைப்படாமல், மேலும் மேலும் பாடல்களைத் தந்து கொண்டே இருக்கிறார்!
-இது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் சில தினங்களுக்கு முன் சொன்னது.

இதில் துளி கூட மிகையில்லை என்பதுதான் உண்மை. தன் பாடல்களை பல நிறுவனங்கள், ரசிகர்கள் உலகமெங்கும் பயன்படுத்தி வந்தாலும், பாடல்களுக்கான ராயல்டி என ராஜா எதுவும் பெறவில்லை.
இந்த விஷயத்தை மிகத் தாமதமாக உணர்ந்த ராஜா, அதை ஒழுங்குபடுத்த முயன்றார். அப்போதுதான் இவரது பாடல்களை வெளியிட்டு பல கோடி ரூபாய் சம்பாதித்து, ஆனால் ராஜாவுக்கு எதுவுமே தராமலிருந்த எக்கோ இசை நிறுவனம் மாட்டியது. ரூ 30 கோடிக்கு மேல் அவர்கள் இளையராஜாவுக்கு உரிமைத் தொகை தரவேண்டியிருந்தது. அவர்கள் மீது போலீசில் புகார் தரப்பட்டு வழக்கும் நடந்து வருகிறது.
அந்த சமயத்தில் இளையராஜாவின் இசை வெளியிடும் உரிமையைப் பெற்றது மலேசியாவைச் சேர்ந்த அகி மியூசிக் எனும் நிறுவனம். இந்த உரிமையைப் பெற இளையராஜாவுக்கு ஒரு பைசா கூட தரவில்லை அகி மியூசிக் என்பதை அதன் உரிமையாளரான அகிலன் என்பவரே தனது ப்ளாகில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இளையராஜாவுக்கு உரிய உரிமைத் தொகையைத் தருவதில் அகி மியூசிக்கும் எக்கோ நிறுவன வழியில் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருப்பதால் அதுபற்றி வெளிப்படையாக பேச மறுத்து வருகிறது இசைஞானி தரப்பு.
இளையராஜாவுக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்தபோது, 'இளையராஜாவை மோசடி செய்வதற்கென்றே கிளம்பி வருகிறார்கள் சிலர். அப்படித்தான் இந்த அகி மியூசிக்கும். இவர்கள் செய்திருக்கும் பலே மோசடிகளை வழக்கு முடிந்ததும் அம்பலப்படுத்தவிருக்கிறோம்.
இனி இளையராஜாவை மோசடி செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்டதும், அவர் பெயருக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் டாஸ்மாக், காண்டம் குறியீடு போன்றவற்றை அட்டையில் போட்டு, அசிங்கமான தலைப்புகளில் அவர் பாடல்களை வெளியிடும் கேவலமான முயற்சியில் இறங்கியுள்ளது அகி மியூசிக். இதனை வன்மையாகக் கண்டித்துள்ளார் இளையராஜா. விரைவில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவிருக்கிறார்கள்,' என்றனர்.
வெளிநாடுகளில் ராயல்டி என்பது மிகப் பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இதில் மோசடி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுகின்றன வெளிநாட்டு நீதிமன்றங்கள். ஆனால் இந்தியாவில் இன்னும் இந்த விஷயம் ரொம்ப சாதாரணமாகவே பார்க்கப்படுகிறது.
இதுபற்றி அகி மியூசிக் உரிமையாளர் அகிலனைத் தொடர்கொண்டு விசாரித்தோம். அவர் அளித்துள்ள விளக்கம் இது:
"ராயல்டி தராமல் என்பது சுத்த பொய். அதை ராஜா ஸார் சொல்லியிருக்க வாய்பில்லை. ஆபாச படங்களா? அது எப்படி சாத்தியம்? அறிவிற்கு பொருந்தாத குற்றச்சாட்டு.
ஒரு 10 பேர் திரும்ப திரும்ப இப்படி எதாவது செய்துகொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள். குறை சொல்லிக்கொண்டே இருப்பவர்கள் ஏதோ ஒருவகை பொறாமையால் இதைச் செய்கிறார்கள் என்றே நினைக்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











