பாதுகாப்பு சோதனை: இசைஞானியிடம் மன்னிப்பு கேட்ட விமான நிலைய அதிகாரிகள்!
பெங்களூர்: இசைஞானி இளையராஜாவை நீண்ட நேரம் காக்க வைத்த விவகாரத்தில், பெங்களூர் விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
சமீபத்தில் கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ள கோயில்களுக்கு இசைஞானி இளையராஜா மகன் கார்த்திக் ராஜா மற்றும் குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.

மீண்டும் சென்னை திரும்புவதற்காக பெங்களூர் விமான நிலையத்திற்கு இளையராஜா வந்தார். அப்போது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இளையராஜா உடமைகளை சோதனை செய்தனர்.
சோதனையில் கோயில் பிரசாதங்களான தேங்காய் மற்றும் விபூதியை விமானத்தில் கொண்டு செல்ல அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அப்போது கார்த்திக் ராஜா அங்கு நடந்த சம்பவங்களை புகைப்படம் எடுத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அதிகாரிகள் இசைஞானியை சோதனை என்ற பெயரில் நீண்ட நேரம் காக்க வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்ட சக பயணிகள் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரை காக்க வைக்க வேண்டாம்.
அவரை மரியாதையுடன் நடத்துங்கள் என்று சத்தம் போட, நிலைமை மோசமாவதைக் கண்ட விமான நிலையத்தின் உயர் அதிகாரிகள் அங்கு வந்து நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டனர்.
அதிகாரிகள் மன்னிப்பு கேட்ட பின்னரே சக பயணிகள் அவ்விடத்தை விட்டு அகன்றனர். நடந்த சம்பவம் குறித்து இசைஞானி '' நான் அதனை தவறாகக் கருதவில்லை. பாதுகாவலர்கள் அவர்களது கடமையைத் தான் செய்தனர்'' என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











