அப்பா தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மேடையில் தேசிய விருது வென்ற கணவர்.. குதூகலிக்கும் ஐஸ்வர்யா!
சென்னை: தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்தும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷும் ஒன்றாக இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஐஸ்வர்யா தனுஷ் அவர்கள் என்னுடையவர்கள் என பூரிப்புடன் பதிவிட்டுள்ளார்.
67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லி விஜியன் பவனில் இன்று நடைப்பெற்றது.
இதில் ஏற்கனவே தேசிய விருது அறிவிக்கப்பட்ட திரைப்பட நட்சத்திரங்களுக்கு குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு விருதுகளை வழங்கினார்.

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது
தேசிய திரைப்பட விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. சினிமாவில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக மத்திய அரசு இந்த விருதை வழங்கி வருகிறது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ஏற்கனவே தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

குடியரசுத் துணைத் தலைவர்
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேசிய திரைப்பட விருது விழாவில் இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு குடியரசு துணைத் தலைவர் தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார்.

தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது
இதனிடையே சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது. அசுரன் படத்தில் நடித்ததற்காக இந்த விருது நடிகர் தனுஷ் வழங்கப்பட்டுள்ளது. அசுரன் படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி இருந்தார். இந்தப் படம் சிறந்தப் படத்திற்கான விருதையும் பெற்றது.

என் தலைவர் விருது பெற்ற மேடையில்
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த், உணர்ச்சிபூர்வமாக பேசியிருந்தார். ரசிகர்களுக்கும் நன்றி கூறியிருந்தார். இதே போல் நடிகர் தனுஷும் விருது பெற்றது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதாவது என் தலைவர் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மேடையில் நான் சிறந்த நடிகருக்கான தேவிய விருது பெற்றதை விவரிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி கூறிய தனுஷ்
மேலும் தனது மற்றொரு பதிவில் "இந்த மரியாதையை எனக்கு வழங்கிய தேசிய விருது ஜூரிக்கு நன்றி என்றும் நிலையான ஆதரவு அளித்த பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி என்றும் நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார். அவரது பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அப்பாவும் கணவரும் ஒன்றாக
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற தனது தந்தையும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற தனது கணவரும் ஒன்றாக இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இது வரலாறு...
மேலும் இந்த போட்டோக்களுக்கு அவர்கள் என்னுடையவர்கள் என்றும் இது வரலாறு என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். மேலும் #prouddaughter #proudwife என்ற ஹேஷ்டேக்குகளையும் குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். ஐஸ்வர்யா தனுஷின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











