7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் ரியல் ஜோடி!
மும்பை : பாலிவுட்டின் நட்சத்திரத் தம்பதிகளான அஜய் தேவ்கன் - கஜோல் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள். திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் இருவரும் நெருக்கமான தம்பதிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், 'பரினீதா' உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரதீப் சர்க்கார் இயக்கத்தில் இருவரும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள். அஜய் தேவ்கனும் கஜோலும் இணைந்து இதுவரை ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்கள். கடைசியாக இருவரும் சேர்ந்த நடித்த படம் கிரீத் குரானா இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான 'டூன்பூர் கா சூப்பர்ஹீரோ'.

இந்நிலையில் இந்த ரியல் ஜோடி மீண்டும் சேர்ந்து படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். இதுகுறித்து அஜய் தேவ்கன், 'நானும் எனது மனைவி கஜோலும் பிரபல விளம்பர இயக்குநர் ராஜ் சாரதி படத்தில் சேர்ந்து நடிக்கவேண்டியது சில காரணங்களால் முடியாமல் போய்விட்டது.
இப்போது இயக்குநர் பிரதீப் சர்க்கார் இயக்கும் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கிறோம். இது ஒரு யதார்த்தப் படமாக இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.
இருவரையும் ஒன்றாகத் திரையில் பார்க்க பாலிவுட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். கஜோல், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் மூலம் தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











