வலிமை கொண்டாட்டத்திற்காக பால் பாக்கெட்டுகளை எடுத்த அஜித் ரசிகர்கள்...பரபரப்பு வீடியோ
சென்னை : வலிமை படம் ரிலீசானதை கொண்டாடுவதற்காக, அஜித்தின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்ய அஜித் ரசிகர்கள் சிலர், பால் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்ற பரபரப்பு வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இதை பார்த்த பலரும் அஜித் ரசிகர்களை திட்டி தீர்த்து வருகின்றனர்.
Recommended Video
அஜித் நடித்துள்ள வலிமை படம் இன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் இதை ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் அஜித்தின் கட்அவுட், பேனர் என வைத்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

தியேட்டர்களை சேதப்படுத்திய ரசிகர்கள்
வலிமை படத்தின் ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ இன்று அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. முதல் ஆளாக படத்தை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில், வெகு நேரமாக தியேட்டர் வாசலில் காத்திருந்த ரசிகர்கள் முண்டியடித்த ஓடிச் சென்றதில், சென்னை ரோகினி தியேட்டரில் கண்ணாடி கதவுகள் நொறுக்கப்பட்டன. இது போல் தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களிலும் அஜித் ரசிகர்கள் சேதம் ஏற்படுத்தி உள்ளனர்.

போனி கபூர் காருக்கு பாலாபிஷேகம்
தியேட்டரில் மட்டுமல்ல வெளியிலும் அஜித்தியன்ஸ் செய்த அட்டகாசங்களின் வீடியோக்கள், போட்டோக்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன. சென்னையில் தியேட்டர் ஒன்றில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க வந்த வலிமை தயாரிப்பாளர் போனி கபூரின் காருக்கு ரசகர்கள் பாலாபிஷேகம் செய்து வரவேற்றுள்ளனர். காரில் இருந்து இறங்கி தியேட்டருக்குள் செல்வதற்குள் அவருக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

பால் பாக்கெட்டுகளை எடுத்த ரசிகர்கள்
அதே போல் தியேட்டர் அருகில் கூடிய ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி, டிராபிக்கில் நகர முடியாமல் நின்ற பால் வண்டியில் இருந்து பால் பாக்கெட்டுகளை ரசிகர்கள் எடுத்துச் சென்று, அஜித்தின் கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர். முதலில் ஒருவர் விளையாட்டாக எடுக்கப் போய் மற்றவர்களும் அதையே பின் தொடர்ந்து கொத்து கொத்தாக பல பால் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.
வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும் கலாச்சாரம் இன்னமுமா உள்ளது என பலர் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். அதே சமயம் அதிகமானவர்கள் அஜித் ரசிகர்களின் இந்த செயலை வன்மையாக கண்டித்து, மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கட்அவுட் வைத்து ஆள் உயர மாலை போடுவதே ஓவர், இதில் பாலாபிஷேகம் வேறயா. அப்படி பண்ண வேண்டும் என்றால் சொந்த காசு கொடுத்து வாங்கி பண்ண வேண்டியது தானே. மக்களுக்கு சப்ளை செய்வதற்காக வண்டியில் கொண்டு செல்லும் பால் பாக்கெட்டுகளை இப்படி எடுப்பது தவறு என கண்டித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











