கரூர் கூட்ட நெரிசல்.. விஜய் மட்டும் பொறுப்பு இல்லை.. மாறுங்கள்.. அஜித் டாப் கிளாஸ் பேச்சு
சென்னை: கரூருக்கு விஜய் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் அழைத்து சில நாட்களுக்கு முன்பு ஆறுதல் தெரிவித்தார் விஜய். அதற்கு பிறகு அரசியல் பணிகளில் கவனம் செலுத்திவருகிறார். இப்படிப்பட்ட சூழலில் அந்த துயர சம்பவம் குறித்து நடிகர் அஜித் பேசியிருப்பது மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியல் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து கரூருக்கு சென்றார். ஆனால் அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அந்த சம்பவம் மிகப்பெரிய விவாதத்தையும், துக்கத்தையும் ஏற்படுத்தியது. அந்த துயரத்துக்கு விஜய் மட்டும்தான் காரணம் என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள். அவரும் இத்தனை நாட்கள் மௌனமாகவே இருந்தார்.
ஆறுதல் சொன்ன விஜய்: ட்வீட்டையும், வீடியோவையும் வெளியிட்ட விஜய் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து ஆறுதல் கூறினார். அப்போது அவர்களிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும்; உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன் என்று உறுதி அளித்ததாகவும் அந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் பேட்டிகளை கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி விரைவில் கரூருக்கும் வருவதாக கூறியதாக தெரிகிறது.

அஜித் கொடுத்த பேட்டி: பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து விஜய் ஆறுதல் சொன்னது விமர்சனங்களை சந்தித்துவருகின்றன. இந்நிலையில் இந்த கரூர் துயர சம்பவம் குறித்து அஜித் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "கரூர் கூட்ட நெரிசல் காரணமாக தமிழ்நாட்டில் நிறைய விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்கு அந்த தனி நபர் மட்டுமே காரணமில்லை.
எல்லோருமே காரணம்தான்: அந்தத் துயர சம்பவத்து நாம் அனைவருமே காரணம்தான். ஊடகங்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது. ஒரு சமூகமாக கூட்டத்தை கூட்டி காட்டுவதில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். இது அனைத்தும் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்கும்தான் கூட்டம் வருகிறது. ஆனால் அங்கெல்லாம் இப்படி நடப்பதில்லையே. ஏன் திரையரங்குகளில் மட்டும் நடக்கிறது. சினிமா பிரபலங்களுக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறது. ஒட்டுமொத்த திரையுலகத்தையும் உலக அளவில் தவறாக சித்தரிக்கிறது. ஹாலிவுட் நடிகர்கள் எல்லாம் இதை விரும்புவதில்லை.
இதையெல்லாம் ஊக்குவிக்கக்கூடாது: எங்களுக்கு ரசிகர்களின் அன்பு தேவைதான். அதற்காகத்தான் நடிகர்களாகிய நாங்கள் கடுமையாக உழைகிறோம்.குடும்பத்தை பிரிந்து நிறைய நேரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறோம். ஒரு படத்தை உருவாக்குவதற்கு காயங்களையும் ஏற்கிறோம். இவை அனைத்துமே மக்களின் அன்புக்காகத்தான். ஆனால் அந்த அன்பை காட்டுவதற்கு உயிரை பணையம் வைக்க வேண்டாம். முதல் நாள் முதல் காட்சி கலாசாரத்தை ஊடகங்களும் ஊக்குவிக்கக்கூடாது" என்றார்.


Click it and Unblock the Notifications











