ஏழுமலையான் கருணையால் 'என்னை அறிந்தால்' பிப்.5ல் ரிலீஸ் ஆகுமா? எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள்
திருப்பதி: என்னை அறிந்தால் திரைப்படம் நல்லபடியாக உருவாகி வந்துள்ள நிலையில், நடிகர் அஜித், திருப்பதி கோயிலுக்கு சென்று எழுமலையானை தரிசித்து விட்டு திரும்பியிருக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே செல்வதால், அஜித்தின் சாமி தரிசனத்திற்கு பிறகாவது சொன்ன தேதியில் என்னை அறிந்தால் ரிலீஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘என்னை அறிந்தால்'. இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்கள், எங்களுக்கு இது 'தல' பொங்கல் என்று கூறி கொண்டாடிடனர். இதனிடையே பட வேலைகள் பாக்கியிருப்பதால் ஜனவரி 29ம்தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு திடீரென அறிவித்ததால் தயாரிப்பு தரப்புக்கு எதிராக ரசிகர்கள் பொங்கினர். இருப்பினும், அஜித்துக்காக பல்லைக்கடித்துக் கொண்டனர்.

ஆனால் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பது போல, படம் பிப்ரவரி 5ம்தேதி ரிலீஸ் ஆகப்போவதாக அறிவிக்கப்பட்டது. இம்முறை சென்சார் தாமதத்தை காரணமாக கூறியது படக்குழு. பட வெளியீடு தள்ளிப்போக, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இடையே ஏற்பட்டுள்ள மோதல்தான் காரணம் என்று சிலர் கொளுத்திப்போட்டனர். இந்நிலையில்தான், அஜித் படம் ரிலீசாகும் தினத்தன்று தியேட்டர்களில் குண்டு வெடிக்கும் என்ற மிரட்டல் வெளியாகியுள்ளது.
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில்தான் அஜித் நேற்று திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். ஏழுமலையானை அவர் மனமுருக வேண்டிக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.
அஜித் ஏழுமலையானை தரிசனம் செய்வது புதிது கிடையாது. பில்லா-2, ஆரம்பம், வீரம் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகும் அஜித் ஏழுமலையானை தரிசனம் செய்தார். திருப்பதி சென்று வந்த பிறகு தனது திரையுலக வாழ்க்கையில் திருப்பங்கள் நடந்துவருவதாக நம்பிக்கை கொண்டுள்ளார் அஜித் என்கின்றனர் அவரது நெருங்கிய நண்பர்கள்.
எனவேதான், என்னை அறிந்தால் ரிலீசுக்கு முன்பாகவும், அஜித் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த ஏழுமலையான் கருணையால், இனியாவது என்னை அறிந்தால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகக்கூடாது என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுதல்.


Click it and Unblock the Notifications