ஓரினச்சேர்க்கை பற்றிய 'அலிகார் ' திரைப்படம்..இந்திய சட்டத்தால் தடை செய்யப்படுமா?
மும்பை: ஹன்ஷல் மெஹ்தா இயக்கியிருக்கும் அலிகார் (இந்தி) திரைப்படத்திற்கு செக்ஷன் 377 ன் படி தடை விதிக்கப்படலாம் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு உண்மையான ஓரினச்சம்பவம் பற்றிய கதையைத் தான் ஹன்ஷல் திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.
கடந்த 29 ம் தேதி வெளியான இப்படத்தின் டிரெய்லர் இதுவரை 17 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்திருக்கிறது.

அலிகார்
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய விரிவுரையாளர் ஸ்ரீநிவாச ராமச்சந்திர சிராஸ் அவரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவியே இப்படத்தை ஹன்ஷல் மெஹ்தா இயகியிருக்கிறார். ஓரினச்சேர்க்கையாளர் என்ற ஒரே காரணத்திற்காக விரிவுரையாளர் பணியிலிருந்து ஸ்ரீநிவாச ராமச்சந்திர சிராஸ் பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய சட்டம்
இந்திய தண்டனை சட்டம் 377 ன் படி இந்திய நாட்டில் ஓரினசேர்க்கை தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் உருவாகியிருக்கும் அலிகார் திரைப்படத்திற்கு தற்போது தடை விதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

தற்போதைய
இந்தப் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியிருக்கும் நிலையில் வெளியீட்டிற்கு முன் இப்படத்தை நீதிமன்றம் ஒருமுறை பார்வையிட முடிவு செய்துள்ளது. அவர்கள் பார்த்து இப்படம் இயற்கைக்கு மாறாக இருப்பின் இப்படத்தை தடை செய்யவும் முடிவெடுத்துள்ளனர்.

பிப்ரவரி 26
வருகின்ற பிப்ரவரி 26 ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தில் கல்லூரி விரிவுரையாளர் வேடத்தில் மனோஜ் பாஜ்பாய் நடித்திருக்கிறார். மனோஜ் பாஜ்பாயுடன் இணைந்து ராஜ்குமார் ராவ் மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி முக்கியமான வேடங்களில் நடித்திருக்கின்றனர். இதில் மனோஜ் பாஜ்பாயின் நடிப்புக்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

திரைப்பட விழாக்களில்
இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே பூசான் திரைப்பட விழா,மும்பை மற்றும் லண்டன் திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு ஏராளமான பாராட்டுகளை பெற்றுள்ளது.

குவியும் ஆதரவு
சமீபத்தில் வெளியான டிரெய்லரை இதுவரை 1,744,556 பார்வைளையும் ஏகப்பட்ட லைக்குகளையும் இந்த டிரெய்லர் பெற்றிருக்கிறது. மேலும் கருத்துத் தெரிவித்த பலரும் இந்த மாதிரிப் படங்கள் நமது இந்திய சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும் இந்தியா வளர்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
படல்பூர், என்ஹெச்10
பிரபலமான படல்பூர் மற்றும் என்ஹெச்10 ஆகிய படங்களை தயாரித்த யுரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து இருக்கிறது.
இந்தப் படம் தடைகளைத் தாண்டி வெளியாக வேண்டும் என்பதே சினிமா ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களின் எண்ணமாக இருக்கிறது.ஓரினசேர்க்கை என்கிற கருப்பொருளே இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அதே நேரத்தில் இப்படம் தடை செய்யப்படவும் இதே காரணம் தான் முதன்மையாக இருக்கிறது. தடைகளைத் தாண்டி அலிகார் வெளியாகுமா? பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











