சத்தமில்லாம சாதிக்கும் புரொஃபஸர்.. லாக் டவுனில் வசூல் வேட்டை நடத்தும் மணி ஹெய்ஸ்ட்!
சென்னை: ஸ்பெயின் நாட்டின் கேபிள் டிவியில் ஒளிபரப்பான ஒரு டிவி தொடரை, நெட்பிளிக்ஸ் கைப்பற்றி உலகளவில் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. அதன் பெயர் தான் மணி ஹெய்ஸ்ட்.
Recommended Video
வங்கியில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு தோற்றுப் போன ஒருவரின் மகன், ஸ்பெயின் நாட்டில் பணம் அச்சடிக்கும் இடத்தையே கையகப்படுத்தி வேண்டுமான அளவு பணத்தை அச்சடித்துக் கொண்டு எஸ் ஆவது தான் மணி ஹெய்ஸ்ட்டின் ஹைலைட். அடுத்ததாக ஸ்பெயின் ரிசர்வ் வங்கிக்குள் நுழைந்து அரசுக்கு சொந்தமான பல நூறு டன் தங்கத்தை உருக்கி கோணிப் பைகளில் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்குகிறது இந்த கேங்.
கொரோனா வைரஸ் லாக்டவுனால், ஆன்லைனே கதியென கிடக்கும் பலரையும் டார்கெட் செய்து ஏப்ரல் 3ம் தேதி வெளியான மணி ஹெய்ஸ்ட் இந்த லாக் டவுனில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

4வது பாகம்
கடந்த மூன்று பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து 4வது பாகம் வெளியாகி உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அலெக்ஸ் பெனா இயக்கத்தில் ஸ்பெயின் மொழியில் La Casa de Papel என்கிற பெயருடன் வெளியான இந்த தொடரை Money Heist என ஆங்கிலத்தில் டப் செய்து நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீம் செய்து வருகிறது.

மாஸ்டர் மைண்ட்
கொள்ளையில் நேரடியாக களமிறங்காமல், டோக்கியோ, நைரோபி என ஊர் பெயர்களை கொண்ட ஒரு டீமை உருவாக்கி பல பிளான்களை போட்டு, மாஸ்டர் மைண்ட் உடன் கொள்ளையடிக்கும் புரொஃபஸர் தான் இந்த மணி ஹெய்ஸ்ட்டின் ஹீரோ. புரொஃபஸராக ஸ்பெயின் நாட்டு நடிகர் ஆல்வரோ மார்ட்டே நடித்துள்ளார்.

65 மில்லியன் ரசிகர்கள்
மணி ஹெய்ஸ்ட்டின் மூன்றாவது சீசனுக்கு உலகம் முழுவதும் 34 மில்லியன் ரசிகர்கள் இருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்டு இருக்கும் இந்த லாக் டவுனால், மணி ஹெய்ஸ்ட்டின் 4ம் பாகம் வெளியாகி வெறும் 20 நாட்களில் 65 மில்லியன் ரசிகர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படி இருக்கு?
மணி ஹெய்ஸ்ட்டின் முக்கியமான கதாபாத்திரமான நைரோபி, உயிருக்கு போராடுவதும் அவரை காப்பாற்ற மணி ஹெய்ஸ்ட் குழுவினர் போராடுவதுமாக 4வது சீசன் தொடங்குகிறது. இன்னொரு புறம் புரொஃபஸரை துரத்திய போலீஸ் அதிகாரியான லிஸ்பன் அவர் மீது காதலில் விழ, இந்த பாகத்தில் போலீஸ் அதிகாரிகள் அவரை விசாரித்து வருகின்றனர். தன்னால் பாதிக்கப்பட்ட இருவரையும் எப்படி புரொஃபஸர் காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த பாகத்தின் கதை.

அடுத்த சீசனுக்கு
நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகி உலகளவில் ரசிகர்களை ஈர்த்துள்ள மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸின் 5வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லாக் டவுனில் 4வது சீசனை ஒரே மூச்சாக பார்த்து முடித்த ரசிகர்கள், அடுத்த பாகத்தில் புரொஃபஸர் செய்யும் வித்தைகளை காண ஆர்வமுடன் இருக்கின்றனர்.

விழிப்புணர்வு விளம்பரங்கள்
மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரின் வெற்றிக்கு மூலக் காரணமே அதன் அழுத்தமான வசனங்கள் தான். பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா மணி ஹெய்ஸ்ட் தொடர் குறித்த பதிவிட்ட நிலையில், இந்தியாவிலும் அந்த வெப் தொடருக்கு ரசிகர்கள் இருப்பதை உணர்ந்து கொண்ட மும்பை போலீசார், இந்த லாக் டவுன் நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்ற நினைப்பவர்களுக்கு மணி ஹெய்ஸ்ட் படத்தின் வசனத்தை பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











