துபாய் கலை நிகழ்ச்சிக்கு போய் வந்ததால் அல்போன்சா- காதலர் இடையே தகராறு?

ஒரு காலத்தில் பிசியான குத்தாட்ட நடிகையாக வலம் வந்தவர் அல்போன்சா. ஏகப்பட்ட படங்களில் தனி பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். பின்னர் படிப்படியாக இவர் தனது ஆட்டத்தைக் குறைத்துக் கொண்டார்.
இவரும் கல்பாக்கத்தைச் சேர்ந்தவருமான வினோத்குமாரும் காதலித்து வந்தனர். வினோத்குமாரும் சினிமாவில் நடனம் ஆடி வந்தவர்தான். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். விருகம்பாக்கத்தில் வசித்து வந்தனர்.
அல்போன்சா அடிக்கடி துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கலை நிகழ்ச்சிகளுக்குப் போவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்படித்தான் தற்போதும் அவர் துபாய்க்கு கலை நிகழ்ச்சிக்காக போயிருந்தார். நள்ளிரவு வாக்கில்தான் அவர் நேற்று வீடு திரும்பினார். வீடு திரும்பியதுமே அவருக்கும், வினோத்குமாருக்கும் இடையே மோதல் மூண்டதாக தெரிகிறது.
அதன் பிறகுதான் வினோத்குமாரின் மரணம் நேர்ந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், வினோத்குமாரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அல்போன்சாவிடம் விசாரணை நடத்த அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் அல்போன்சா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். இதனால் அல்போன்சாவிடம் உடனடியாக விசாரணை நடத்த முடியாத நிலை போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.
அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதால் அவர் தேறி வந்த பிறகுதான் விசாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை விசாரித்தால்தான் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரிய வரும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











