அல்வா வாசு... மறக்க முடியாத நகைச்சுவைக் கலைஞர்!
Recommended Video

சின்னச் சின்ன காமெடி வேடங்கள்தான் என்றாலும், அதில் தன் வெகுளித்தனமான நடிப்பால் முத்திரைப் பதித்த வெகு சில கலைஞர்களில் ஒருவர் அல்வா வாசு.
சொந்த ஊர் மதுரை என்றாலும், கோவைத் தமிழை அச்சு அசலாகப் பேசுவார். ஒருவேளை மணிவண்ணனுடனே இருந்ததால் அது இயல்பாக வந்துவிட்டது போல.

அவரை கவனிக்க வைத்த படம் மணிவண்ணனின் வாழ்க்கைச் சக்கரம். வில்லனாக வரும் ஜெய்கணேசுக்கு எண்ணெய் தேய்த்து விடும்போதும், சிறையில் கைதியாக இருக்கும்போதும் அவர் வசனங்களைப் பேசும் விதம் அத்தனை இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். அப்போதுவரை இவருக்குப் பெயர் வெறும் வாசுதான்.
அதன் பிறகு அவர் நடித்த படம் அமைதிப் படை. இந்தப் படத்தில் சத்யராஜுக்கு அல்வா வாங்கித் தரும் பாத்திரத்தில் நடித்தார். அதிலிருந்து அல்வா வாசு ஆகிவிட்டார்.
வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான படங்களில் வாசு காமெடி செய்தார். அவற்றில் பல காட்சிகள் அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும். குறிப்பாக இங்கிலீஷ்காரன் படத்தில், 'இங்கிட்டு போனாலும் சாப்பாட்டு ரூம் வந்திடும்ணே' என்று கூறி வடிவேலுவிடம் அவர் கடிபடும் காட்சிகள்.
எல்லாம் அவன் செயல் படத்தில் சிறையில் சிக்கிய வடிவேலுவுக்கு ஜாமீன் எடுக்கப் போய், 'கடல்லயே இல்லையாம்' என்று கூறும் காட்சியும், வட்டச் செயலாளர் வண்டு முருகனை வம்பில் மாட்டிவிடும் காட்சியும் மிகப் பிரபலம்.
கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் படம் முழுக்க வடிவேலுவுடன் வந்து வயிற்றைப் பதம் பார்ப்பார் வாசு.
நகரம் படத்தில் வடிவேலுவின் 100வது திருட்டுக்கு போஸ்டர் அடித்து ஒட்டி போலீசில் மாட்டி வைக்கும் காட்சி காமெடியின் உச்சம்.
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல... 500-க்கும் மேற்பட்ட படங்களில் தன் இயல்பான காமெடியால் மக்களை சிரிக்க வைத்த நல்ல கலைஞன் இன்று மரணத்தைத் தழுவிட்டார்.
இவ்வளவு படங்களில் நடித்திருந்தாலும் கையில் சேமிப்பு என்று எதுவும் இல்லை வாசுவுக்கு. மனைவி, குழந்தையை மதுரையில் தங்க வைத்துவிட்டு, சென்னையில் அறை எடுத்துத் தங்கி நடித்து வந்தார். சிறு நீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு என அடுத்தடுத்து பாதிக்கப்பட்டதால் கடந்த ஓராண்டு காலமாக எந்த நடிக்கவில்லை. வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அவரைக் காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், நேற்று இரவு காலமானார் அல்வா வாசு.


Click it and Unblock the Notifications











