சிங்கம்பட்டி ஜமீன்.. சொரிமுத்து அய்யனார் குறித்து தவறான கருத்து.. நடிகர் ஆர்யா ஆஜராக கோர்ட் உத்தரவு!
நெல்லை: நடிகர் ஆர்யா அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இயக்குநர் பாலா இயக்கத்தில், ஆர்யா, விஷால் நடித்து 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவன் இவன்.
இந்தப்படத்தில் நடிகர்கள் ஆர்யா விஷால், ஜனனி அய்யர், அம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

மான நஷ்ட வழக்கு
இந்நிலையில் இந்தப் படம் குறித்து ஒரு சர்ச்சை கிளம்பியது. அதாவது, இந்தத் திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், சொரிமுத்து அய்யனார் கோயில் குறித்தும் தவறான கருத்து இடம்பெற்றிருந்ததாகக் கூறி இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் ஆகியோர் மீது சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மகன் சங்கர் ஆத்மஜன் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.

நேரில் ஆஜராகவில்லை
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கை நடத்த தடைவாங்கிய நிலையில், தடை காலம் முடிந்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு இயக்குநர் பாலா நேரில் ஆஜரான நிலையில் ஆர்யா இதுவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை.

நேரில் ஆஜராக உத்தரவு
இந்நிலையில் புதன்கிழமையான நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் செப்டம்பர் 28ஆம் தேதி நடிகர் ஆர்யா விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

முருகதாஸ் தீர்த்தபதி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பக்கத்தில் உள்ளது சிங்கம்பட்டி ஜமீன். இதில் 31-வது ராஜவாக இருந்து வந்தவர் முருகதாஸ் தீர்த்தபதி. 1936-ம் ஆண்டு தந்தை சங்கர தீர்த்தபதி மறைவுக்குப் பிறகு 6 வயதில் முருகதாஸ் தீர்த்தபதிக்கு முடிசூட்டப்பட்டது.

கடந்த மே மாதம் மறைவு
இந்தியாவில் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டதற்கு முன்பே முருகதாஸ் தீர்த்தபதி பதவி ஏற்றுவிட்டதால், இவர் தான் கடைசி ராஜாவாக இருந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் 25ஆம் தேதி முருகதாஸ் தீர்த்தபதி வயது முதிர்வின் காரணமாக தனது 89-வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











