விஜய்யின் தெறி படத்தால் நஷ்டமடைந்தேனா?.. இயக்குநர் அமீர் விளக்கம்
சென்னை: விஜய்யின் தெறி குறித்து எந்த கருத்தையும் கூறவில்லை என இயக்குநர் அமீர் விளக்கமளித்திருக்கிறார்.
விஜய், சமந்தா நடிப்பில் வெளியான தெறி படத்தால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. எனவே விஜய், தாணு இருவருக்கும் எதிராக நான் வழக்குத் தொடரப் போகிறேன் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் அமீர் கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நான் எந்த சமூக வலைதளங்களிலும் இயங்கவில்லை என அமீர் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "திரு.விஜய்யின் வளர்ச்சி பிடிக்காத சிலருடைய செயல்களால் தெறி படம் வெளிவருவதில் இருந்த சிக்கல்களையும், வெளியான நாள் முதல் வந்துகொண்டிருக்கக்கூடிய தவறான தகவல்களையும் நான் அறிவேன்.
அதே நேரத்தில் தெறி படத்திற்கான விநியோகம் குறித்து என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் ஒரு செய்தி பதிவிட்டிருப்பதாக இன்று காலை அறிந்தேன்.
எனக்கென்று அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கமோ அல்லது ட்விட்டர் பக்கமோ நான் வைத்துக்கொள்ளவில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய பெயரில் உள்ள முகநூல் பக்கமோ, ட்விட்டர் பக்கமோ என்னுடையது இல்லை. யாரோ சில தவறான எண்ணம் கொண்டவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











