'அஜீத் படத்தைத் தயாரிக்கவில்லை'.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமிதாப்பச்சன்!
சென்னை: அஜீத்தின் 58 வது படத்தை நான் தயாரிக்கவில்லை என்று கூறி பரபரப்பாக எழுந்த வதந்திகளுக்கு, நடிகர் அமிதாப் பச்சன் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். காலில் மேற்கொண்ட அறுவை சிகிச்சைகள் காரணமாக தள்ளிப் போன இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது.
57 வது படத்திற்குப் பின் அஜீத் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாக்.

விஷ்ணுவர்த்தன்
முதலில் 'பில்லா', 'ஆரம்பம்' என அஜீத்தை வைத்து 2 ஹிட்களைக் கொடுத்த விஷ்ணுவர்தன் இப்படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது. சரித்திரக் கதையாக உருவாகும் இப்படத்தில் அஜீத் மன்னராக நடிக்கப் போகிறார் என அப்படம் குறித்து நாள்தோறும் புதிய தகவல்கள் வெளியாகின.

அட்லீ
ஆனால் சமீபகாலமாக அட்லீ இயக்கத்தில் அஜீத் நடிக்கப் போவதாக தகவல்கள் அடிபட்டு வருகின்றன. சமீபத்தில் அஜீத்தை சந்தித்த அட்லீ அவருக்கு ஏற்றவாறு ஒரு கதையைக் கூறி ஓகே வாங்கி விட்டார் என்று கோடம்பாக்கமே பரபரத்துக் கிடந்தது. இதனால் 'தெறி' வந்தபோது அட்லீயைக் கிண்டலடித்த அஜீத் ரசிகர்கள் கூட அவசரப்பட்டு ஓட்டிட்டோமா? என்று சிந்திக்க ஆரம்பித்தனர்.

உல்லாசம்
அஜீத்தை வைத்து 'உல்லாசம்' படத்தை தயாரித்த அமிதாப் பச்சன் தான் அவரின் அடுத்த படத்தையும் தயாரிக்கப் போகிறார். இயக்குநர் அட்லீயாக இருக்கலாம் என்று அட்லீயுடன், அமிதாப்பை கோர்த்து விட்டு வேடிக்கை பார்த்தவர்களும் உண்டு.
அமிதாப் பச்சன்
இந்நிலையில் அஜீத் படத்தைத் தான் தயாரிக்கவில்லை என்று கூறி வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மிஸ்டர் பிக் பி. ரசிகர் ஒருவர் அமிதாப் சார் நீங்கள் அஜீத்தின் 58 வது படத்தைத் தயாரிக்கிறீர்களா? என்று ட்விட்டரில் கேட்க அதற்கு அமிதாப் இல்லை என்று பதிலளித்து, அஜீத் படம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











