இதை படிக்கும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன்: ஆராத்யாவுக்கு அமிதாப் உருக்கமான கடிதம்
மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது பேத்திகள் நவ்யா மற்றும் ஆராத்யாவுக்கு எழுதியுள்ள கடிதம் பலரையும் கவர்ந்துள்ளது.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது மகள் வழி பேத்தி நவ்யா நந்தா மற்றும் மகன் வழி பேத்தி ஆராத்யா பச்சன் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதம் பலரையும் கவர்ந்துள்ளது.
கடிதத்தில் அமிதாப் பச்சன் கூறியிருப்பதாவது,
நவ்யா, ஆராத்யா
என் அன்பு நவ்யா மற்றும் ஆராத்யா, உங்களின் தாத்தாக்கள் உங்களுக்கு நந்தா, பச்சன் ஆகிய பெயர்கள், புகழ், மரியாதையை அளித்துள்ளனர். நீங்கள் நந்தா அல்லது பச்சனாக இருந்தாலும் சிறுமிகள்... பெண்கள். நீங்கள் பெண்கள் என்பதால் மக்கள் தங்களின் எண்ணங்களை உங்கள் மீது புகுத்துவார்கள்.
உடை
மக்கள் நீங்கள் எப்படி உடை அணிய வேண்டும், நடந்து கொள்ள வேண்டும், யாரை நீங்கள் பார்க்கலாம், எங்கு செல்லலாம் என்பதை கூறுவார்கள். அடுத்தவர்களின் நிழலில் வாழ வேண்டாம். உங்களின் அறிவால் உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யுங்கள். உங்கள் பாவாடையின் நீளம் உங்களின் குணத்தை முடிவு செய்ய விடாதீர்கள்.

திருமணம்
நீங்கள் யாருடன் நட்புடன் இருக்க வேண்டும் என்று அடுத்தவர்கள் கருத்து கூறும்படி வைக்காதீர்கள். நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினால் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் திருமணம் செய்யாதீர்கள்.

கவலை வேண்டாம்
மக்கள் எதையாவது கூறுவார்கள். அதற்காக நீங்கள் அனைவர் கூறுவதையும் கேட்க வேண்டும் என்று இல்லை. உலகம் என்ன சொல்லும் என்று எப்பொழுதும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக யாரும் முடிவு எடுக்க விடாதீர்கள்.

ஆராத்யா
நவ்யா- உன்னுடைய பெயர் பெண்ணாக நீ சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து உன்னை பாதுகாக்காது.
ஆராத்யா- நீ இதை பார்த்து புரிந்து கொள்ளும்போது நான் இங்கு இல்லாமல் போகலாம். ஆனால் நான் இன்று கூறுவது என்றைக்கும் பொருந்தும்.

பெண்
பெண்ணாக இருப்பது கடினம். பெண்களாக நீங்கள் தான் இதை மாற்ற வேண்டும். பெண்களுக்கு முன்மாதிரியாக உங்களால் திகழ முடியும். இதை செய்யுங்கள். அப்படி செய்தால் நான் அமிதாப் பச்சன் என்பதை விட உங்களின் தாத்தா என்பதை நினைத்து பெருமை அடைவேன்.


Click it and Unblock the Notifications











