ஏறாத ஃபிளைட் இல்லை.. குடிக்காத சரக்கு இல்லை.. ரோபோ சங்கரின் மறைவு பலருக்கும் ஒரு பாடம்
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்த சம்பவம் அனைவரிடமும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது அவரது உடல் வளசரவாக்கத்தில் இருக்கும் ஷங்கரின் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ரோபோ சங்கர் கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.
ஸ்டாண்ட் அப் காமெடியன், பல குரல் மன்னன் என பல திறமைகளை தன்னிடம் கொண்டு இருந்தவர் ரோபோ சங்கர். ஆரம்ப காலத்தில் மேடையில் ஏறி அனைவரையும் சிரிக்க வைத்த அவர் ஒரு கட்டத்துக்கு மேல் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சிரிக்க வைத்தார். இதன் காரணமாக அவர் குறுகிய காலத்திலேயே பேமஸ் ஆகிவிட்டார்.
நடிகர் ரோபோ சங்கர்: சின்னத்திரையில் ரோபோ சங்கரின் திறமையை கவனித்து வந்த தனுஷ், தான் ஹீரோவாக நடித்த மாரி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்து ரோபோ சங்கரை முழுநேர சினிமா நடிகராக மாற்றினார். தனக்கு கிடைத்த வாய்ப்பினை சின்னத்திரையை போலவே சரியாக பயன்படுத்திக்கொண்ட சங்கருக்கு வரிசையாக வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன. இதனால் முன்னணி ஹீரோக்களின் படத்திலும் முக்கியமான கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக, நகைச்சுவை நடிகராக மாறினார் ரோபோ சங்கர்.

மருத்துவமனையில் ரோபோ சங்கர்: இதற்கிடையே கடந்த வருடத்தில் ரோபோ சங்கருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அதிக அளவு மது குடித்ததால் அவருக்கு கல்லீரல் பிரச்சனை உருவாகி சிகிச்சை எடுத்தார். எப்படியோ சிகிச்சையில் இருந்து முழுமையாக மீண்ட அவர் புது மனிதராக பிறப்பெடுத்து அனைத்து தீய பழக்கங்களில் இருந்தும் ஒதுங்கியே இருந்தார். இதனால் அவரும் அவரது குடும்பத்தினரும் பெரிய நிம்மதி அடைந்தனர்.
உயிரிழந்த ரோபோ சங்கர்: இந்நிலையில் அவருக்கு திடீரென நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் பல சிகிச்சைகளை அளித்தும் அந்த சிகிச்சைகளை ஏற்றுக்கொள்ளும் நிலையில் சங்கரின் உடல் இல்லை. இதனால் அவர் நேற்று இரவு 9.05 மணியளவில் இயற்கை எய்தினார். இன்று அவரது இறுதி சடங்குகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டாகும் வீடியோ: அவருக்கு பலரும் தங்களது அஞ்சலியையும், இரங்கலையும் தெரிவித்துவரும் சூழலில் சில மாதங்களுக்கு முன்பு அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது. அந்த வீடியோவில் அவர், "நான் குடிக்காத பாட்டிலே கிடையாது கிடையாது. 60 ரூபாய் சரக்கிலிருந்து 60,000 ரூபாய் பாட்டில்வரை குடித்திருக்கிறேன். அனைத்திலுமே எக்ஸ்ட்ரீம் போய்விட்டு வந்துவிட்டேன். ஏறாத ஃப்ளைட் இல்லை, பார்க்காத லக்சரி கார் இல்லை, பல நாடுகளுக்கு சென்று வந்துவிட்டேன். இப்போது அதையெல்லம் உடைத்துவிட்டேன்" என தெரிவித்திருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் 46 வயதில் புகழின் உச்சியை பார்த்துவிட்டு இப்படி இறந்துவிட்டாரே என்று சோகத்துடன் கூறிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











