மெர்சல் படத்துக்கு அதிக டிக்கெட் விலை வைக்கக் கூடாது - உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: மெர்சல் படத்துக்கு அதிக டிக்கெட் விலை வைக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னையைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது முதல் சில நாட்களுக்கு மிகக் கடுமையாக டிக்கெட் விலையை உயர்த்தி வசூலிக்கின்றனர். ரூ.300 முதல் ரூ.1000 வரை வசூலிக்கப்பட்டது. இது சட்ட விரோதம் ஆகும். அரசும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இந்த நிலையில், தீபாவளி அன்று நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் வெளியாகிறது. இந்தப் படத்தை பார்க்க வரும் ரசிகர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அப்படத்தை வெளியிடும் தியேட்டர் உரிமையாளருக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும்," என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரும், மெர்சல் படத்தயாரிப்பாளர் சார்பில் வக்கீல் விஜயனும் ஆஜராகி வாதிட்டனர்.
பின்னர் இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்தார்.


Click it and Unblock the Notifications











