நடிகர் விமல் மீது அடுத்தடுத்து குவியும் பணமோசடி புகார்கள்...இப்போ யார் தெரியுமா?
சென்னை : நடிகர் விமல் மீது ஏற்கனவே இரண்டு தயாரிப்பாளர்கள் பணமோசடி புகார் அளித்திருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் மற்றொறு சினிமா விநியோகஸ்தரும் கமிஷனர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இன்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரின் மகளே போலீசில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video
நடிகர் விமல் மீது திரைத்துறையை சேர்ந்த பலரும் அடுத்தடுத்து போலீஸ் புகார் அளித்து வருவது கோலிவுட்டிலும், மீடியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யார் பக்கம் பேசுவது என தெரியாமல் பலரும் குழம்பிப் போய் உள்ளனர்.

என்ன பிரச்சனை
நடிகர் விமல், ரூ.5 கோடி பணத்தை பெற்றுக் கொண்டு மன்னர் வகையறா படத்தை தயாரித்து விட்டு, அந்த பணத்தை திருப்பி தராமல் இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறார் என கோபி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த விமல், கோபி மற்றும் சிங்கார வேலன் இருவரும் திட்டமிட்டு சதி செய்து வருவதாக கூறினார்.

விமல் மீது போலீசில் புகார்
இந்நிலையில் தயாரிப்பாளர் சிங்கார வேலனும், நடிகர் விமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளித்தார். அதில், ரூ.1.5 கோடியை திருப்பி தராமல் ஏமாற்றி வரும் விமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். ரஜினியின் லிங்கா, விஜய் சேதுபதியின் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளேன். இந்நிலையில் திரைப்பட விநியோகம் குறித்து சில விளக்கங்களை பெறுவதற்காக 2016 ம் ஆண்டு நடிகர் விமல் என்னை சந்தித்து பேசினார்.

களவாணி 2 படத்தால் வந்தது
அந்த சமயத்தில் விமலின் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து, பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் அவரை வைத்து படம் எடுக்க யாரும் முன்வரவில்லை. திருப்பூரை சேர்ந்த கணேசன் என்ற தயாரிப்பாளரால் துவக்கி, பாதியில் கைவிடப்பட்ட மன்னர் வகையறா என்ற படத்தை மேற்கொண்டு தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு பண உதவி தேவை என்றும் கேட்டு கொண்டார். நானும் நண்பர் கோபியை அறிமுகம் செய்து வைத்து, ரூ.5 கோடி பணம் வாங்கிக் கொடுத்தேன். களவாணி 2 படத்திற்காக முன்பணமாக ரூ.1.5 கோடி கொடுத்தேன். ஆனால் சொன்ன படி படத்தின் வேலைகள் துவங்கப்படவில்லை.

திசை திருப்ப விமல் முயற்சி
இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகவும், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதற்காகவும், என் நண்பர் கோபி கொடுத்துள்ள ரூ.5 கோடி மோசடி புகாரை திசை திருப்புவதற்காகவும், நான் ஏமாற்றி விட்டதாக பொய்யான புகாரை கொடுத்துள்ளார் நடிகர் விமல். அவதூறு கருத்துக்களையும் மீடியாக்களில் பரப்பி வருகிறார் என புகார் மனுவில் சிங்கார வேலன் குறிப்பிட்டிருந்தார்.

விமலுக்கு எதிராக குவியும் புகார்கள்
கோபி மற்றும் சிங்கார வேலன் அளித்த புகார் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் மேலும் ஒரு சினிமா விநியோகஸ்தர் கங்காதரன் என்பவரும் நடிகர் விமல் மீது பண மோசடி புகார் அளித்தார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட மன்னர் வகையறா படத்தின் தயாரிப்பாளர் திருப்பூர் கணேசனின் மகள் ஹேமா என்பவர் இன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் 5 பக்கத்திற்கு விமலுக்கு எதிராக புகார் அளித்திருப்பது. இந்த பிரச்சனையை பெரிதாக்கி உள்ளது.

விமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஹேமா தனது புகாரில், மன்னர் வகையறா ரிலீசின் போது தான் முதலீடு செய்த பணத்தை எனது அப்பா பணத்தை திருப்பி கேட்டதற்கு விமலிடம் சரியான பதில் இல்லாததால் விமல் மீது வழக்கு தொடர்ந்தார். இதற்காக சமரசம் பேசிய விமல், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி பணத்தையோ, கால்ஷீட்டையோ தரவில்லை. ஆனால் என் தந்தைக்கு தெரியாமல் அவரிடம் இருந்த டப்பிங் உரிமத்தை வேறு ஒருவருக்கு விற்று விட்டார். மோசடி செய்து ஏமாற்றிய விமல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு தங்களுக்கு சேர வேண்டிய 1.73 கோடியை பெற்று தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











