உத்தா பஞ்சாப் பட விவகாரம்... சென்சாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பாலிவுட்!
மும்பை: உத்தா பஞ்சாப் படத்துக்கு தணிக்கை செய்த விவகாரத்தில், ஒட்டுமொத்த சென்சார் அமைப்பையும் கலைக்கக் கோரி போர்க்கொடி தூக்கியுள்ளது பாலிவுட்.
அபிஷேக் சவுபே இயக்கத்தில் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘உத்தா பஞ்சாப்'. ஆலியா பட், கரீனா கபூர் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ள இந்தப் படம், போதைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர். வரும் ஜூன் 17-ந் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தைத் தணிக்கை செய்ய சமீபத்தில் அனுப்பியிருந்தனர். சில காட்சிகள் ஆட்சேபனைக்கு உரியதாக இருப்பதாக கூறி நீக்கிய சென்சார், மேலும், 13 இடங்களில் மாற்றம் செய்யுமாறு பரிந்துரைத்தனர். படத்தின் தலைப்பில் ‘பஞ்சாப்' பெயர் இடம்பெறுவதற்கும் கண்டனம் தெரிவித்தது.
இதனால், வேதனை அடைந்த தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப், ‘‘திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் நீக்குவது, துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்வதற்கு சமம்,'' என்று டுவிட்டரில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கு பதிலடி கொடுத்த தணிக்கை குழு தலைவர் பகலஜ் நிஹாலனி, ‘‘உத்தா பஞ்சாப் படத்தின் தயாரிப்பாளர்கள் கடந்த திங்கட்கிழமை என்னை சந்தித்தார்கள். அப்போது, நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து பேசினார்கள். அதற்கான சான்றிதழை தருமாறு அவர்கள் கேட்டனர். ஆனால், அதனைப் பெற இதுவரை அவர்கள் வரவில்லை. இதை விட்டு விட்டு நேரடியாக ஊடகத்திடம் சென்று பேசுகின்றனர்," என்றார்.
மேலும், தலைப்பில் பஞ்சாப் என்ற பெயர் இடம்பெறுவதற்கு ஆட்சேபனை தெரிவித்த பகலஜ் நிஹாலனி, "பஞ்சாப் மாநிலத்தை மோசமாகக் காட்டுவதற்கு ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் பணம் பெற்றதாக நான் கேள்விப்பட்டேன்,'' என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருந்தார்.
தணிக்கை குழு தலைவருக்கும், தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால், இந்த விவகாரம் பாலிவுட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக இந்தி திரையுலகினர் நேற்று மும்பையில் திரண்டு பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் நடிகர் அமிதாப்பச்சன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அமிதாப்பச்சன், ‘படைப்பாற்றலை கொலை செய்யக் கூடாது' என்றார்.
தயாரிப்பாளர் முகேஷ் பட் கூறும்போது, ‘‘தணிக்கை குழுவின் நடவடிக்கை சகித்து கொள்ள முடியாதது. திரையுலகினரால் இதனை ஏற்க முடியவில்லை. தணிக்கைக் குழுத் தலைவர் பகலஜ் நிஹாலனியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்,'' என்றார்.


Click it and Unblock the Notifications











